அடேங்கப்பா யோசனை! ஆண்களுக்கு 'இலவச மது பாட்டில்கள்'- கர்நாடகா சட்டசபையை அதிரவைத்த எம்எல்ஏ!
பெங்களூர்: கர்நாடகாவில் பெண்களுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுவதைப் போல ஆண்களுக்கும் வாரம் 2 மதுபாட்டில்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்று அம்மாநில சட்டசபையில் ஜேடிஎஸ் எம்.எல்.ஏ. கிருஷ்ணப்பா பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கர்நாடகா மாநில சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சட்டசபை கூட்டத்தில் ஜேடிஎஸ் எம்.எல்.ஏ. கிருஷ்ணப்பா பேசியதாவது: பொதுமக்களிடம் மது குடிக்கும் பழகத்தை நிறுத்த முடியாது. அதுவும் தொழிலாளர்களிடம் இந்த பழக்கத்தை நிறுத்திவிடவும் முடியாது.

கர்நாடகா மாநில அரசு பெண்களுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை தருகிறது; இலவச மின்சாரம் தருகிறது; இலவச பேருந்து பயணத்துக்கு அனுமதி தருகிறது. இவை அனைத்தும் மக்களின் வரிப்பணம்தான்.
ஆகையால் பெண்களுக்கு இத்தனையையும் தருவதைப் போல ஆண்களுக்கும் தர வேண்டும். உதாரணமாக மது குடிக்கும் ஆண்களுக்கு ஒவ்வொரு வாரமும் 2 மதுபான பாட்டில்களை இலவசமாக அரசாங்கம் தரலாம். ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு நாம் பணம் தர முடியாது அல்லவா? அதனால் மதுபாட்டில்களாகவே கொடுத்துவிடலாம்.
ஆண்களுக்கும் ஏதாவது கொடுக்க வேண்டும் அல்லவா.. வாரத்துக்கு 2 மதுபான பாட்டில்களைத்தான் கொடுக்க வேண்டும் என்கிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது? இந்த மதுபாட்டில்களை சொசைட்டிகள் மூலமாகவும் கொடுக்கலாமே. இவ்வாறு கிருஷ்ணப்பா பேசினார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் கேசி ஜார்ஜ், நீங்கள் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்த பின்னர் இப்படி இலவசமாக மதுபாட்டில்களைக் கொடுக்கலாம். எங்களைப் பொறுத்தவரை குடிப் பழக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
மேலும் சபாநாயகர் யுடி காதர் கூறுகையில், ஏற்கனவே மது அருந்துவோரால் சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிறோம். இதில் 2 மதுபாட்டில்களை இலவசமாக கொடுக்க வேண்டுமா? அப்படியானால் நிலைமை என்னவாகும்? எனவும் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications