வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க
பெங்களூர்: வந்தாரை வாழ வைக்கும் நாடு நம்முடையது. அப்படித்தான் 22 வயதில் இங்கு வந்து ஓட்டல் தொழிலை தொடங்கிய அமெரிக்க இளைஞர், இன்று டாப் கோடீஸ்வரர்களில் ஒருவராக மாறியிருக்கிறார்.
இந்திய சந்தையை புரிந்துக்கொள்வது சாதாரண விஷயம் கிடையாது. அதிலும், உணவு மார்க்கெட்டை சரியாக பிடித்துவிட்டால் நீங்கள்தான் மாஸ். அதைத்தான் இந்த அமெரிக்க இளைஞர் செய்திருக்கிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பெர்ட் முல்லர், தனது 22-வது வயதில் இந்தியாவுக்கு வந்தார். தற்போது 35 வயதாகும் இவர், இந்தியாவில் மிகவும் பிரபலமான மெக்சிகன் உணவுச் சங்கிலியான 'கலிபோர்னியா பரிட்டோ' நிறுவனத்தின் நிறுவனராக உயர்ந்திருக்கிறார்.
தொடக்கப் புள்ளி
கடந்த 2010-ம் ஆண்டு ஜெய்ப்பூருக்கு ஒரு கல்விச் சுற்றுலா வந்தபோதுதான் இவருக்கு இந்த யோசனை தோன்றியது. அங்கு தங்கியிருந்தபோது, அவர் தனது இந்திய நண்பர்களுக்கு அமெரிக்க உணவுகளைச் சமைத்துக் கொடுத்தார். ஆனால், அவர்கள் அதை விரும்பவில்லை. அதே சமயம், மெக்சிகன் வகை உணவான 'பரிட்டோ' (Burrito) அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தியர்களின் சுவைக்கு மெக்சிகன் உணவுகள் நெருக்கமாக இருப்பதை உணர்ந்த முல்லர், இதையே ஒரு தொழிலாக மாற்றத் தீர்மானித்தார்.
வெற்றிப் பயணம்
2012-ம் ஆண்டு சுமார் ரூ.2.3 கோடி முதலீட்டுடன் பெங்களூருவில் தனது முதல் உணவகத்தைத் தொடங்கினார். அவர் எதிர்பார்த்த அந்த மேஜிக் நடந்தது. தெற்கு கலிபோர்னியா பாணி உணவு இந்தியர்களுக்கு பிடித்துவிட்டது. எனவே இந்த உணவுகளில் கவனம் செலுத்திய இவரது நிறுவனம், இன்று இந்தியா முழுவதும் 103 கிளைகளுடன் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
தொடக்கத்தில் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வணிகம், தற்போது ஆண்டுக்கு சுமார் ₹190 கோடி வருவாய் ஈட்டும் அளவுக்கு வளர்ந்துள்ளது.
ஏன் இந்தியாவை தேர்ந்தெடுத்தார்?
இந்தியாவுக்கு வந்ததற்கான காரணம் குறித்து முல்லர் கூறுகையில், "அமெரிக்காவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு இடத்திற்குச் செல்ல விரும்பினேன். எனக்கு இந்திய உணவுகள் மிகவும் பிடிக்கும் என்பதாலும், இங்கு ஆங்கிலம் பேசுபவர்கள் அதிகம் என்பதாலும் இந்தியாவைத் தேர்ந்தெடுத்தேன்" என்றார்.
டாப் கோடீஸ்வரர்
தற்போது பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 'கலிபோர்னியா பரிட்டோ', இந்தியாவின் முன்னணி துரித உணவு நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. ஒரு வெளிநாட்டவர் இந்தியச் சந்தையைப் புரிந்துகொண்டு, இங்குள்ள மக்களின் ரசனைக்கேற்ப உணவுகளை வழங்கி வெற்றி பெற்றது பல இளம் தொழில்முனைவோருக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications