தொழில் ஆரஞ்சு வியாபாரம்.. பழம் விற்றே பள்ளி கட்டிய சாதனை.. எளிய மனிதருக்குக் கிடைத்த பத்மஸ்ரீ
பெங்களூரு: 2020-ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது, கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த ஒரு ஆரஞ்ச் பழ வியாபாரிக்கு கிடைத்துள்ளது.
2020-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த 25-ஆம் தேதி அதாவது சுதந்திர தினத்துக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இதில் 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 16 பேருக்கு பத்ம பூஷண் விருதுகளும், 118 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளும் என மொத்தம் 141 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டது.
இந்த பட்டியலில் பிரபலமில்லாத சாதனை புரிந்த நபர்களின் பெயர்கள் இருந்தன. அவர்களில் ஒருவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஹரேகலா ஹஜப்பா என தெரியவந்தது.

பழ வியாபாரம்
இவர் மங்களூரை அடுத்த தட்சின கன்னடா பகுதியைச் சேர்ந்தவர். இவர் ஒரு ஆரஞ்ச் பழ வியாபாரி. இவர் அப்படி என்னதான் சாதனை செய்தார் என கேட்கிறீர்களா. தனது கிராமத்தில் படிக்கும் குழந்தைகள் படிப்பை இழந்துவிடக் கூடாது என விரும்பினார். இதனால் வெயில், மழை பார்க்காமல் சாலையில் பழம் விற்பனை செய்தார்.

மத்திய அரசு
அதில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பள்ளிக்கான இடத்தை வாங்கினார். 2000-ஆம் ஆண்டு முதல் முறையாக அந்த கிராமத்தில் இவரது முயற்சியால் பள்ளி கட்டப்பட்டது. இதில் ஏராளமானோர் படித்து வருகின்றனர். ஏழ்மையான நிலையிலும் இவர் செய்து வரும் சேவையை பாராட்டிதான் மத்திய அரசு பத்ம விருதை அறிவித்துள்ளது.

லட்சியம்
இதுகுறித்து ஹஜப்பா ஒரு முறை ஆரஞ்சு பழ வியாபாரம் செய்து கொண்டிருந்த போது வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்னிடம் பழம் வாங்க வந்தனர். பழத்தின் விலையை ஆங்கிலத்தில் கேட்டுள்ளனர். அது இவருக்கு புரியவில்லை. இதனால் அந்த வெளிநாட்டவர்கள் பழம் வாங்காமலேயே சென்றுவிட்டனர். அப்போது முதல் எனது கிராமத்து குழந்தைகள் படித்து முன்னேறுவதையே லட்சியமாக கொண்டேன் என்றார்.

மகிழ்ச்சி
பள்ளி கட்டுவதற்கு காரணமாக இருந்த இவர் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சுத்தமான நீரை காய்ச்சி வடிகட்டி வழங்கி வருகிறார். அத்துடன் வகுப்பறைகளையும் சுத்தம் செய்து கொடுக்கிறார். 25-ஆம் தேதி ரேஷன் கடையில் வரிசையில் ஹஜப்பா நின்ற போது அவருக்கு விருது அறிவிக்கப்பட்டிருப்பதை அதிகாரிகள் தெரிவித்த போது நம்பவில்லை. பின்னர் மகிழ்ச்சி அடைந்தார். லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்போருக்கு கூட தானம் ,தர்மம், செய்ய மனமில்லாத போது ஆரஞ்ச் பழம் விற்றே ஒரு பள்ளியை கட்டினார் என்றால் அவரது சாதனை பத்ம விருதுகளுக்கு ஈடாகாது.












Click it and Unblock the Notifications