சித்தராமையா அரசின் இலவச திட்டங்களை.. பேஸ்புக்கில் விமர்சித்த அரசு பள்ளி ஆசிரியர் அதிரடி சஸ்பெண்ட்!
பெங்களூரு: கர்நாடக முதலமைச்சராக பதவியேற்று இருக்கும் சித்தராமையாவை விமர்சித்து பேஸ்புக்கில் பதிவிட்ட கர்நாடக அரசு பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் சித்திரதுர்கா மாவட்டம் ஹோசதுர்காவை அடுத்துள்ளது கன்னுபெனஹல்லி பகுதி. இங்குள்ள அரசு தொடக்க பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சந்தானமூர்த்தி. இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தற்போது கர்நாடகா மாநில முதலமைச்சராக பதவியேற்று இருக்கும் சித்தராமையாவை விமர்சித்து பதிவிட்டு இருக்கிறார்.

குறிப்பாக சித்தராமையாவின் நிதிக்கொள்கை, இலவச திட்டங்களை அவர் தனது பேஸ்புக் பதிவில் விமர்சித்து எழுதி இருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, "முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆட்சி காலத்தில் மாநில அரசின் கடன் ரூ.3,590 கோடியாக இருந்தது. தரம் சிங் ஆட்சி காலத்தில் மாநில அரசின் கடன் ரூ.15,635 கோடியாக இருந்தது.
குமராசாமி முதலமைச்சராக இருந்தபோது கர்நாடகா மாநில அரசின் கடன் ரூ.3,545 கோடியாக இருந்தது. எடியூரப்பா முதலமைச்சராக இருந்தபோது மாநிலத்தின் கடன் ரூ.25,653 கோடியானது. சதானந்த கவுடாவின் ஆட்சி காலத்தில் இந்த கடன் தொகை ரூ.9,464 கோடியாக இருந்தது. ஜெகதீஷ் ஷட்டர் ஆட்சியின்போது மாநிலத்தின் கடன் ரூ.13,464 கோடியாக இருந்தது.
அதே நேரம் கடந்த முறை சித்தராமையாக கர்நாடகா மாநில முதலமைச்சராக ஆட்சியில் இருந்தபோது மாநில அரசு ரூ.2.42 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது." என்று குறிப்பிட்டு உள்ளார். அதாவது இதுவரை கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த முதலமைச்சர்களிலேயே சித்தராமையாதான் அதிக கடன் வாங்கியதாக குறிப்பிட்டு இருந்தார்.
"இருப்பினும் அவரால் எளிதில் இலவச திட்டங்களை அறிவிக்க முடிகிறது" என்று அவர் பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தார். அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் ஒருவர் முதலமைச்சரை விமர்சித்து வெளியிட்ட இந்த பதிவு கர்நாடகா மாநிலத்தில் அதிகளவில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது.

இதுகுறித்து சித்திரதுர்கா மாவட்ட பொதுக்கல்வித் துறை இணை இயக்குநர் கே.ரவிசங்கர் ரெட்டி தெரிவிக்கையில், "அந்த பேஸ்புக் பதிவு தொடர்பாக, ஆசிரியர் சந்தானமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்திட, ஹோசதுர்கா கல்வி அதிகாரி ஜெயப்பாவிடம் உத்தரவிட்டு இருக்கிறேன். அந்த ஆசிரியர் கர்நாடகா அரசு அதிகாரிகள் சட்டம் - 1966 ஐ மீறி இருக்கிறார். இது தொடர்பாக அந்த ஆசிரியர் மீது மேற்கொண்டு விசாரணை நடத்தப்படுவதற்கு முன்பாக துறை ரீதியான விசாரணை நடத்தப்படும்." என்று தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications