‛‛பெங்களூரில் தமிழர்களை ஒன்றிணைக்க விரைவில் மாநாடு’’.. ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு
பெங்களூர்: தமிழர்களின் ஒற்றுமையை இணைக்க விரைவில் பெங்களூரு நகரில் பிரம்மாண்ட தமிழர்கள் மாநாடு நடத்தப்படும் என்று தமிழ் ஆர்வலர் எஸ் டி குமார் தெரிவித்தார்.
நம் அண்டை மாநிலமான கர்நாடாகவில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். குறிப்பாக பெங்களூரில் லட்சக்கணக்கில் தமிழர்கள் உள்ளனர். இந்நிலையில் தான் பெங்களூர் அல்சூரு ஏரிக்கரையில் உள்ள யாதவா சங்கத்தில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது.

தமிழ் ஆர்வலர் எஸ்டி குமார் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அதிமுகவின் கர்நாடக மாநில செயலாளராக இருந்த எஸ்டி குமார், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் தான் எஸ்டி குமார் கர்நாடக மாநில தமிழர்கள் ஒற்றுமைக்காக புதிய அமைப்பை ஏற்படுத்த உள்ளார். இதையடுத்து இன்று பெங்களூருவில் பல தமிழக அமைப்புகள் ஒன்றிணைந்து குமார் தலைமையில் ஆலோசனை நடத்தினர். இதில் தமிழ் அறக்கட்டளை, பிஇஎம்எல் தமிழ் மன்றம், நம்ம ஊர் தமிழ் மக்கள் குழு, தேசிய மனித உரிமை அமைப்பு, எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர் ரசிகர் அமைப்பு, லைனஸ் குரூப் ஆப் கர்நாடகா, ஐடிஐ தமிழ் மன்றம் உள்ளிட்ட ஏராளமான அமைப்பினர், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ் வாழ்த்து பாடல், கன்னட வாழ்த்து பாடப்பட்டது. பின்னர் நம்மூர் தமிழ் மக்கள் குழுவின் சார்பில் பரதநாட்டிய நடனம் ஆடப்பட்டது. பின்னர் தனியார் கல்லூரியில் முதல்வராக பணியாற்றும் சிவகுமார் ஆலோசனை கூறினார். அப்போது அவர், ‛‛ தமிழர்கள் கல்வியில், பொருளாதாரம் பின் தங்கி உள்ளனர்.
திருவள்ளுவர், பாரதியார் பெயரில் கூட்டுறவு வங்கிகளை தொடங்க வேண்டும். அறக்கட்டளை தொடங்க வேண்டும். உயர்கல்வியில் தமிழர்கள் முன்னெற வேண்டும்'' என்று எடுத்துரைத்தார். இதுதவிர மாநிலம் முழுவதிலும் இருந்து வந்திருந்த அனைத்து தமிழர்களும் கர்நாடக தமிழர்கள் வாழ்வியல் மேம்பட பல கருத்துக்களை முன் வைத்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியாக சிங்கப்பூர் மலேசியா ஆகிய நாடுகளில் ஒருங்கிணைந்து இருப்பது போல் கர்நாடக தமிழர்கள் ஒன்றிணையும் வகையில் விரைவில் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் லட்சக்கான தமிழர்களை ஒன்றிணைத்து மாநாடு நடத்தப்படும் என்று எஸ்டி குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications