காங்கிரஸ் மூத்த தலைவர்கள் டார்ச்சர் தாங்க முடியல.. ஆனாலும்... கண்ணீர் சிந்திய முதல்வர் குமாரசாமி
பெங்களூர்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் டார்ச்சர் என்னால் தாங்க முடியவில்லை என கர்நாடக முதல்வர் குமாரசாமி கண்ணீர் விட்டு அழுதார்.
கர்நாடகத்தில் பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகள் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டன. இந்நிலையில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. இதையடுத்து பாஜக ஆட்சியை தடுக்க காங்கிரஸ் வியூகம் வகுத்தது.
அதன்படி மஜதவின் தேவகௌடாவிடம் சோனியா காந்தி தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கு பேசினார். மஜதவை விட காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் பாஜகவை தடுப்பதற்காக முதல்வர் பதவியை குமாரசாமிக்கு விட்டுக் கொடுத்தது காங்கிரஸ்.
வெளிப்பாடு
இதையடுத்து காங்கிரஸ் கூட்டணியுடன் அரியணை ஏறினார் குமாரசாமி. இந்த கூட்டணி அமைத்த சில மாதங்களிலேயே முதல்வர் பதவி என்பது ரோஜா பூ படுக்கை அல்ல, முள் படுக்கை என பல்வேறு வேதனைகளை வெளிப்படுத்தினார்.
எம்எல்ஏ கூட்டம்
இதன் மூலம் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியினுள் ஏதோ புகைந்து கொண்டிருந்தது தெரியவந்தது. இந்நிலையில் மஜத கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
மனஉளைச்சல்
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட குமாரசாமி திடீரென கண்ணீர் விட்டு அழுதார். அப்போது அவர் கூறுகையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் எனக்கு மிகுந்த மனஉளைச்சலையும் டார்ச்சரையும் கொடுத்து வருகின்றனர்.
அதிர்ச்சி
எனினும் இவற்றை மாநில மற்றும் கட்சியின் நலனை கருத்தில் கொண்டு நான் பொறுத்து கொண்டு போகிறேன் என்றார். ஒரு மாநில முதல்வர் கூட்டணி கட்சியினுள் நடப்பதையே சமாளிக்க முடியாமல் கண்ணீர் சிந்துவது அந்த மாநில மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.