இட்லி சாப்பிட்டால் கேன்சர் வருதா? பெங்களூர் தள்ளுவண்டி கடைகளில் நம்பவே முடியலயே.. ஆடிப்போன கர்நாடகா
பெங்களூர்: ஹோட்டலில் இட்லி சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படும் என கர்நாடக அரசு பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. அதிலும் தள்ளுவண்டி கடைகளில் இட்லி வேக வைப்பதை பார்த்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்கள்.. என்ன காரணம்?
இட்லியை பொறுத்தவரை சத்தான உணவு.. காரணம், 1 இட்லியில் 65 கலோரிகள், 2 கிராம் புரோட்டீன், 2 கிராம் நார்ச்சத்து, 8 கிராம் கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கின்றன. இட்லியில் கொழுப்பு சத்து கொஞ்சமும் கிடையாது. எளிதில் ஜீரணமாகக்கூடியது.. தசைகளை வலிமையடைய செய்யக்கூடியது. ரத்தத்தை உற்பத்தி செய்யக்கூடியது.

உடலுக்கு சத்தான உணவு இட்லி
மூளையில் உள்ள செல்களுக்கு சுறுசுறுப்பை தரக்கூடியது. வயிற்றிலுள்ள புண்களை ஆற்றக்கூடியது. நார்ச்சத்தும், இரும்புச்சத்தும் அதிகமாக நிறைந்திருப்பவை.. நொதித்தல் முறையில் தயாரித்து, ஆவியில் வேகவைக்கப்படுவதால் அனைவருக்குமே ஏற்ற உணவாக திகழ்கிறது. அதனால்தான், தென்னிந்தியாவில் எந்த கடை இட்லி என்றாலும், அதை தயக்கமின்றி பொதுமக்கள் வாங்கி சாப்பிடுகிறார்கள்.
ஆனால், இந்த தயாரிப்பு முறைகளில் மாற்றம் ஏற்படும்போதுதான், அது உடலுக்கு கெடுதலை உண்டாக்கக்கூடியதாக மாறிவிடுகிறது.. அப்படித்தான் கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இட்லி, சாலையோர கடைகள், ஓட்டல்களில் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பது குறித்து கர்நாடக சுகாதாரத்துறை ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருக்கிறது.
சுகாதாரத்துறை அதிகாரிகள்
இதற்காக, 500க்கும் மேற்பட்ட கடைகளிலும், ஓட்டல்களிலும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வகத்திற்கு அனுப்பியிருந்தது.. அதன் முதற்கட்ட ஆய்வு முடிவில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதைக்கேட்டு அதிர்ந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஓட்டல்களுக்கு நேரடியாகவே கிளம்பி சென்று, இட்லி எப்படி தயாரிக்கப்படுகிறது? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், பெரும்பாலான கடைகளில் இட்லி துணிக்கு பதிலாக பிளாஸ்டிக் ஷீட் பயன்படுத்தப்படுவதை கண்டறிந்தனர்.. இந்த பிளாஸ்டிக் ஷீட்டில் மாவு ஊற்றி, இட்லி பாத்திரத்தில் சூட்டில் வேகவைக்கும்போது, பிளாஸ்டிக் ஷீட்டில் இருந்து டையாக்சின், மைக்ரோ பிளாஸ்டிக் (carcinogenic) என்ற ரசாயனம் வெளியேறுகிறது.. இது இட்லியில் கலந்து விடுகிறது.. இந்த இட்லியை சாப்பிடும்போது, அது சிறிது சிறிதாக சேர்ந்து புற்றுநோய்க்கு வழிவகுப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்..
தள்ளுவண்டி கடைகளில் அபாயம்
மொத்தம் 52 ஹோட்டல்கள், தள்ளுவண்டி கடைகளில் சேகரித்த இட்லிகளில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும், டெஸ்ட்டுக்கு கொண்டுபோன இட்லிகள் குறித்த ஆய்வுகள் இன்னும் நடந்து கொண்டிருப்பதால், இந்த முடிவுகள் வெளியாகும் பட்சத்தில் அடுத்தக்கட்ட தகவல்கள் வெளிவரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் இதைப்பற்றி சொல்லும்போது, உணவக தயாரிப்புகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், பிளாஸ்டிக் ஷீட்டில் இட்லி மாவு ஊற்றி வேக வைப்பதை அறிந்தால், அதை அரசின் கவனத்துக்கு பொதுமக்கள் உடனடியாக கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications