ஹிஜாப் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றா? ஹைகோர்ட்டில் அனல் பறந்த வாதம்! விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
பெங்களூர்: மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் கூட ஹிஜாப் அணிய ஆதரவாக விதி உள்ளது, யூனிபார்ம் நிறத்தில் ஹிஜாப் அணிய அனுமதி வழங்கி உள்ளனர் என்று இஸ்லாமிய மாணவிகள் தரப்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வாதம் வைத்தது. ஹிஜாப் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்று என்று இதில் மாணவிகள் தரப்பு வழக்கறிஞர் வாதம் வைத்தார்.
இந்த வழக்கு நாளைக்கு விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மாணவிகள் பலர் இதற்கு எதிராக கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்து ராஜ் அஸ்வதி, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித், ஜெஎம் காஸி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் இறுதி உத்தரவு வரும்வரை மாணவ, மாணவிகள் மத அடையாளங்களோடு கல்வி நிலையங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பிற்பகல் 3 மணி நிலவரம்.. உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் 49.24 சதவீதம் வாக்குகள் பதிவு!
இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்துவிட்டது. கர்நாடகாவில் உள்ள பியு கல்லூரிகளில் ஹிஜாப் அணிய மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்துத்துவா மாணவர்களின் போராட்டதால் இஸ்லாமிய மாணவிகளுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது .
மாணவிகள் தரப்பு
இன்று குந்தபுரா மாணவிகள் தரப்பு வழக்கறிஞர் தேவ்தத் காமத் இன்று முழுக்க கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வாதம் வைத்தார், அதில் ஹிஜாப் என்பது இஸ்லாமில் இருக்கும் விதிகளில் ஒன்று, குரானில் ஹிஜாப் அணியும்படி கூறப்பட்டுள்ளது. மத உரிமைகளில் அரசு தலையிட முடியாது. இது மத ரீதியான கடைபிடிக்க வேண்டிய விதியா, இல்லையா என்பதை அரசு முடிவு செய்ய முடியாது. இது மதம்தான் முடிவு செய்ய வேண்டும். அதேபோல் இது அரசியலமைப்பு சட்டத்தின் 25 விதிப்படி அடிப்படை மத உரிமைகளில் ஒன்றாக வரும். அடுத்தவர்களை பாதிக்காத மத உரிமைகள் மீது அரசு தலையிட முடியாது. ஒரு அரசு உத்தரவு மூலம் அரசியலமைப்பு சட்டம் வழங்கி உள்ள மத அடிப்படை உரிமைகளை தடுக்க முடியாது?
பல வருடம்
மேலும் இவர் கேரளா ஹைகோர்ட் மற்றும் சென்னை ஹைகோர்ட் இரண்டும் ஹிஜாப் அணிய அனுமதி அளித்து வழங்கிய தீர்ப்புகளை எடுத்துக்காட்டி வாதம் செய்தார். அதோடு கடந்த பல வருடங்களாக மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வருகிறார்கள். அப்போது இது பிரச்சனை ஆகவில்லை. குறைந்தபட்சம் 2 வருடங்களாக மனுதாரர்கள் ஹிஜாப் அணிந்து வருகின்றனர். இது அடிப்படை உரிமைகளில் ஒன்று.
நீதிமன்ற தீர்ப்புகள்
இதில் எப்படி கல்லூரி கமிட்டி தலையிட முடியும். பொது ஒழுங்கிற்கு பிரச்சனை இல்லாத பட்சத்தில், ஒருவரின் அடிப்படை உரிமைகளில் அரசு தலையிட முடியாது. இன்னொருவருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக வேறு ஒருவரின் அடிப்படை உரிமைகளை அரசு கேள்வி கேட்க முடியாது. 2 உயர் நீதிமன்றங்கள் இதில் ஏற்கனவே அனுமதி வழங்கி உள்ளது. ஹிஜாப் காரணமாக சட்ட ஒழுங்கிற்கு பிரச்சனை இல்லை என்பதால் அதை அனுமதிக்க வேண்டும்.
கல்லூரி கமிட்டி
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் கூட ஹிஜாப் அணிய ஆதரவாக விதி உள்ளது. யூனிபார்ம் நிறத்தில் ஹிஜாப் அணிய அனுமதி வழங்கி உள்ளனர். இந்த வழக்கில் மாணவிகள் வித்தியாசமான யூனிபார்ம் கேட்கவில்லை. அவர்கள் தாங்கள் அணியும் யூனிபார்ம் மீது அதே நிறத்தில் ஹிஜாப் அணிய அனுமதி கேட்கிறார்கள் என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் காமத் வாதம் செய்தார். இந்த வாதம் சுமார் 3 மணி நேரம் நடந்தது.
தேர்தல்
இந்த நிலையில் இன்னொரு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ஹிஜாப் வழக்கை மீடியா கவர் செய்வதில் இருந்து தடை விதிக்க வேண்டும். தேர்தல் நேரம் என்பதால் உத்தரவு வரும் வரை வாதங்களை செய்திகளாக, வெளியிடுவதை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் இதற்கு நீதிபதிகள் மறுத்துவிட்டனர். தேர்தல் கர்நாடகாவில் நடக்கவில்லை, தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்தால் இதில் முடிவு எடுக்கலாம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதையடுத்து மற்ற மனுதாரர்கள் தரப்பு வாதம் செய்ய கோரிக்கை விடுத்ததால் வழக்கு நாளை ஒத்தி வைக்கப்பட்டது.