என்ன நடக்கிறது இந்தியாவில்? கொதித்த "பால் போக்பா".. சர்வதேச அளவில் எதிரொலித்த ஹிஜாப் விவகாரம்!
பாரிஸ்: கர்நாடகாவில் பியு கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதற்கு பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் பால் போக்பா கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் ஹிஜாப் அணியும் இஸ்லாமிய மாணவிகள் பியு கல்லூரிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. வழக்கு விசாரணை முடியும் வரை எந்த வித மத அடையாளமும் இன்றி மாணவ, மாணவியர் வகுப்பிற்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மாணவியர்கள் இந்த உத்தரவை எதிர்த்து உள்ளனர். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஹிஜாப் விவகாரம்
இந்த நிலையில் ஹிஜாப் விவகாரம் தற்போது சர்வதேச அளவில் எதிரொலித்துள்ளது. இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள், பெண் உரிமை ஆர்வலர்கள் இதை பற்றி பேச தொடங்கி உள்ளனர். அரபு நாடுகளை சேர்ந்த பலரும் கூட இந்தியாவில் ஹிஜாப் விவகாரம் சர்ச்சையானது பற்றி சமூக வலைத்தளங்களில் ட்விட் செய்து வருகிறார்கள். சர்வதேச ஊடகங்களும் இதை விவாதிக்க தொடங்கி உள்ளன.

சர்வதேச அளவில் எதிர்ப்பு
இந்த நிலையில் பிரபல கால்பந்து வீரரும், Manchester United அணியில் விளையாட கூடியவருமான பால் போக்பா இதை பற்றி கருத்து தெரிவித்து அதை உலக அளவில் கவனம் பெற செய்துள்ளார். _islamismydeen_ என்ற பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு அமைப்பு கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்தது பற்றி வீடியோ வெளியிட்டு இருந்தது. மாணவிகளுக்கு எதிராக இந்துத்துவா மாணவர்கள் போராடியது பற்றியும் இந்த வீடியோவில் குறிப்பிட்டு இருந்தது.

பால் போக்பா
இந்த வீடியோவை பகிர்ந்த பால் போக்பா ஹிஜாப் விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டா கிராம் ஸ்டோரியில் இந்தியாவில் தொடர்ந்து இந்துத்துவா கும்பல் ஹிஜாப் அணியும் கல்லூரி மாணவிகளுக்கு எதிரான வன்முறையை கையாண்டு வருகிறது என்று கோபமாக குறிப்பிட்டுள்ளார். அதோடு கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிராக நடந்த போராட்டத்தையும் வீடியோவாக பதிவிட்டு உள்ளார்.

யார் இவர்?
பால் போக்பா பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர். இவரின் தாய் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். அதேபோல் பால் போக்பாவும் இஸ்லாம் மதத்திற்கு 2019ல் மாறினார். கர்நாடகாவில் பியு கல்லூரிகளில் நடைபெற்ற அனைத்து மோதல் சம்பவங்களையும் தொகுத்து இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஹிஜாப் விவகாரத்தில் பெண் உரிமை போராளி மலாலா கருத்து தெரிவித்து இருந்தார்.

மலாலா
இது தொடர்பாக மலாலா தெரிவித்த கருத்தில், ஹிஜாப் அணிந்த மாணவிகளை பள்ளிக்கு செல்லாமல் தடுப்பது மிகவும் கொடுமையான ஒன்று. குறைவாக உடை அணியும் பெண்களையும், அதிகமாக உடை அணியும் பெண்களையும் உடையை காரணம் காட்டி தடுக்க கூடாது. இந்தியாவில் முஸ்லீம் பெண்களை ஓரங்கட்டுவதை அரசியல் தலைவர்கள் தடுக்க வேண்டும், என்று மலாலா கோபமாக தெரிவித்து இருந்தார்.












Click it and Unblock the Notifications