மீண்டும் வந்த கெடுபிடி.. கையில் சீல், வீட்டை சுற்றி ரெட் டேப்.. ரூல்சை மாற்றிய பெங்களூர் மாநகராட்சி
பெங்களூர்: கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருப்போரது வீடுகளில் சிவப்பு டேப் ஒட்டப்பட்டு, வீட்டை சுற்றிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் பணிகளை பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஆரம்பித்துள்ளது பெங்களூர் மாநகராட்சி.
பெங்களூரின் தெற்கு மண்டலம், மேற்கு மண்டலங்களில் வீட்டு தனிமையில் இருப்போர் வீடுகள் பல இவ்வாறு சிவப்பு கலர் டேப்பால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் 14 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்கிறார்கள் என்ற நோட்டீசும் ஒட்டப்பட்டுள்ளது.

கடந்த வருஷம்
கடந்த ஆண்டு ஆரம்பத்தில் பெங்களூர் மாநகராட்சி இவ்வாறான நடவடிக்கையை எடுத்தது. ஆனால் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி வித்தியாசமாக அண்டை வீட்டார் பார்ப்பதாக கூறி, இந்த நடைமுறை நீக்கப்பட்டது. ஆனால், இதில்தான் சிக்கல் ஏற்பட்டது. யார் கொரோனா பாதித்து வீட்டு தனிமையில் இருக்கிறார்கள் என்று பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தெரியவில்லை.

அத்துமீறல்கள்
எனவே வீட்டு தனிமையில் இருப்போர் குப்பை போட, கடைக்கு செல்ல என வெளியே வர ஆரம்பித்தனர். நகரில் கொரோனா நோயாளிகள் அதிகரிக்க இதுதான் காரணம் என்பதை லேட்டாக புரிந்து கொண்ட மாநகராட்சி இப்போது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

சீல் குத்தப்படுகிறது
இதுகுறித்து பெங்களூர் மாநகர ஆணையாளர் கவுரவ் குப்தா கூறுகையில், டேப் ஒட்டுவதோடு, நோயாளி கையில் சீல் முத்திரை குத்தும் பணிகளும் நடக்கிறது. கொரோனா உறுதியானது தெரிந்ததும், அவரது வீட்டுக்கு மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் சென்று கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்கிறார்கள். இதன் மூலம் வேறு நபர்கள் நோயாளியுடன் நெருங்கி பழகுவது தவிர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தீவிர பணிகள்
வருவாய் துறை அதிகாரிகள், மருத்துவர்கள், ஆஷா என்று அழைக்கப்படும் அரசு சமூக ஆரோக்கிய அமைப்பைச் சேர்ந்தவர்கள், கொரோனா நோயாளிகளை அடையாளப்படுத்துவது, தூய்மைப்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்கிறார், மேற்கு மண்டல இணை கமிஷனர், சிவசாமி. பெங்களூர் உட்பட கர்நாடகா முழுவதும் ஜூன் 7ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications