பெங்களூருக்கு நண்பர்களை தேடி சென்று பலியான எம்எல்ஏ மகன்! காரில் ஏர் பேக் ஓபன் ஆகாதது ஏன்? பரபர தகவல்
பெங்களூர்: பெங்களூரில் நள்ளிரவில் நடந்த கார் விபத்தில் ஓசூர் திமுக எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் மகன் கருணாசாகர் உயிரிழந்தது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
Recommended Video
தெற்கு பெங்களூரில் உள்ள, கோரமங்களா பகுதியில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் பிளாட்பாரம் மீது அதிவேகமாக வந்த ஆடி கார் மோதி குப்புற கவிழ்ந்ததில், கருணாசாகர் உட்பட 7 பேர் பலியாகினர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் உயிரிழந்த 7 பேர் தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளனர்.

3 பெண்கள், 4 ஆண்கள்
ஒசூரைச் சேர்ந்த கருணாசாகர்,கேரளாவைச் சேர்ந்த அக்சய் கோயல், ஹரியானாவைச் சேர்ந்த உத்சவ், கர்நாடக மாநிலம் ஹூப்ளியைச் சேர்ந்த ரோகித் ஆகியோர் உயிரிழந்த ஆண்களாகும். மற்ற 3 பெண்களும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இதில், கருணாசாகர் தவிர பிறர் அனைவரும் பெங்களூரிலுள்ள விடுதிகளில் தங்கியிருந்தவர்கள் என்று கூறப்படுகிறது. கருணாசாகர் மட்டும், ஒசூரிலிருந்து அங்கு வந்து இவர்களோடு இணைந்துள்ளார்.

நண்பர்களுடன் இரவு உணவு
பெங்களூரில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்த இந்த ஆண் மற்றும் பெண்கள் கருணாசாகரின் நண்பர்கள் என்று கூறப்படுகிறது. நேற்று இரவு ஓசூரிலிருந்து தனது நண்பர்களை சந்தித்து உணவகத்தில் சாப்பிட்டுள்ளார் கருணாசாகர். இரவு ஓட்டல் மூடப்படும் வரை அங்கேயே இருந்துள்ளனர். இதன் பிறகு ஒரே காரில் 7 பேர் வந்துள்ளனர். முன் இருக்கையில் 3 பேர், பின்புற இருக்கையில் 4 பேர் அமர்ந்துள்ளனர். இதன் காரணமாக டிரைவர் உட்பட ஒருவர் கூட காரில் சீட் பெல்ட் அணிய வில்லை என்று கூறப்படுகிறது.

பலூன் விரிவடையவில்லை
அதிநவீன கியூ 3 வகை காராக இருந்த போதிலும், "சீட்பெல்ட் அணியாத காரணத்தால் வாகனம் விபத்துக்குள்ளான போது ஏர் பலூன் விரிவடையவில்லை". இதன் காரணமாகத்தான் அதில் பயணித்த ஒருவரையும் காப்பாற்ற முடியவில்லை, என்று பெங்களூர் நகர டிராபிக் போலீஸ் இணை கமிஷனர் ரவிகாந்தே கவுடா தெரிவித்துள்ளார். அதிகாலை 3 மணியளவில் காவல்துறையினரால் தனக்கு இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது என்று உயிரிழந்த ரோஹித் உறவினர் ஒருவர் கூறினார். "ரோஹித் தனது நண்பர்களுடன் வெளியே சென்றதாக கூறியிருந்தார். ஆனால் அவரது தொலைபேசியில் இருந்து அதிகாலை 3 மணியளவில் எங்களுக்கு அழைப்பு வந்தது. நாங்கள் காவல் நிலையத்தை அடைந்தபோது, அவர்கள் விபத்து நடைபெற்ற இடத்தின் சில புகைப்படங்களைக் காட்டி ரோஹித் இறந்துவிட்டதாகக் கூறினர். ரோஹித்தின் பெற்றோர் இறந்துவிட்ட நிலையில், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார்." என்று அந்த உறவினர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

அதி வேகம்தான் காரணம்
விபத்து நடந்தபோது அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில், அந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. அதை பார்க்கும்போது கார் மின்னல் வேகத்தில் மிக அதிவேகத்தில் சென்று உள்ளது தெளிவாகத் தெரிகிறது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது புறமாக சென்று பிளாட்பாரத்தின் மீது வேறு வாகனங்கள் செல்ல கூடாது என்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் இரும்பு தடுப்பு கம்பி மீது மோதி அதையும் அடித்து வீழ்த்திவிட்டு நேரே சென்று சுவரில் மோதி பிறகு கவிழ்ந்து விபத்து நடந்துள்ளது. இதை சிசிடிவி காட்சிகளில் பார்க்க முடிகிறது.

தீ பிடித்த கார்
கார் இவ்வாறு மிகப் பெரிய விபத்தில் சிக்கிதும், அதிலிருந்து தீ பிடிக்க ஆரம்பித்துள்ளது. அப்போது மழை பெய்து கொண்டிருந்ததாலும், அங்கே இருந்த சிலர் ஓடி வந்து தண்ணீர் ஊற்றினாலும் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. இருப்பினும் மிக அதிக வேகத்தில் வந்து இரும்பு கம்பி மற்றும் சுவர் மீது மோதி தலைகுப்புற கார் கவிழ்ந்ததால் அதில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலும், ஒருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர்.

எம்எல்ஏ குடும்பத்தில் சோகம்
ஓசூர் திமுக எம்எல்ஏ பிரகாஷ் மனைவி கடந்த மார்ச் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனால் மனச்சோர்வு அடைந்திருந்த பிரகாஷுக்கு, தற்போது அவரது மகனும் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரகாஷ், சென்னை வந்திருந்தார். கருணாசாகர் உயிரிழந்த தகவல் தெரிந்ததும் அவர் அவசரமாக ஓசூர் கிளம்பிச் சென்றுள்ளார்.












Click it and Unblock the Notifications