நடுவானில் திக்திக்.. 4 மணி நேரம் மரண பயம்... கதறிய பயணிகள்! ஒரு வழியாக பெங்களூரில் தரையிறங்கியது
பெங்களூர்: "கடவுளே... எங்களை காப்பாத்துங்க!" - விமானத்திற்குள் இருந்தபடி ஒரு பெண் கதறி அழும் அந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வருகிறது. வெறும் ஒன்றரை மணி நேரப் பயணம், நான்கு மணி நேரத் திக் திக் போராட்டமாக மாறியதுதான் இப்போது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பொதுவாக விமானங்களில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கும். ஆனால், அதையும் தாண்டி சில மோசமான சம்பவங்கள் நடந்துவிடும். அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

விமானம்
நேற்று மதியம் 3 மணி அளவில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 'Fly91' நிறுவனத்திற்குச் சொந்தமான ஏடிஆர் ரக IC3401 விமானம் கர்நாடகாவின் ஹூப்பள்ளி நோக்கிப் புறப்பட்டது. சரியாக மாலை 4:30 மணிக்கு அந்த விமானம் தரை இறங்கியிருக்க வேண்டும். ஆனால், ஹூப்பள்ளி வான் பரப்பை விமானம் நெருங்கியபோது, அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக விமானத்தைத் தரை இறக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து, வானிலை சீராகும் வரை விமானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே வட்டமடிக்க வைப்பதைத் தவிர விமானிகளுக்கு வேறு வழியில்லை. முண்டகோட், தாவணகெரே, ஷிமோகா எனக் கர்நாடகாவின் பல மாவட்டங்களுக்கு மேலே அந்தச் சிறிய ரக விமானம் சுமார் 4 மணி நேரமாக வானிலேயே வட்டமடித்தது. அப்போது ஒரு கட்டத்தில் விமானம் மேகங்களுக்கு இடையே சிக்கிக் குலுங்கியபோது, உள்ளே இருந்த பயணிகள் மரண பயத்தில் உறைந்து போயினர்.
திக்திக்
அப்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தான் இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில், பயணிகள் அழுது கொண்டே பிரார்த்தனை செய்வதும், "ஏன் இப்படி ஆகுது? பெங்களூருக்கே போய்விடலாம்" என்று அழுது கொண்டே கத்துவதும் பதிவாகியுள்ளது. "அழாதீங்க... ஒன்னும் ஆகாது, அமைதியா இருங்க" என்று சில பயணிகள் ஆறுதல் சொன்னாலும், விமானம் குலுங்கிய ஒவ்வொரு முறையும் மரணக் கூச்சல் கேட்டது.
பயணிகள் பதற வேண்டாம் எனச் சொல்லும் விமானிகள், "நாங்கள் சூழ்நிலையைக் கவனித்து வருகிறோம், பொறுமையாக இருங்கள்" என்று தொடர்ந்து அறிவித்து வந்தாலும், நான்கு மணி நேரக் காத்திருப்பு பயணிகளின் பொறுமையைச் சோதித்தது. "ஹூப்பள்ளியில் தரை இறக்க முடியாவிட்டால், அருகிலுள்ள பெலகாவி அல்லது பெங்களூருக்கே விமானத்தைத் திருப்பிவிடலாமே?" என்பதுதான் பயணிகளின் கோரிக்கையாக இருந்தது.
கடும் கோபம்
இந்தச் சம்பவம் குறித்துப் பயணிகளின் உறவினர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். "சரியான தகவல்கள் எங்களுக்குத் தரப்படவில்லை, விமான நிறுவனத்தின் மெத்தனமே இதற்குக் காரணம்" என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நீண்ட நேரத்திற்கு பிறகே விமானம் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டது. ஆனால், Fly91 நிறுவனம் இதை மறுத்துள்ளது.
விளக்கம்
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விமானத்தில் எந்தத் தொழில்நுட்பக் கோளாறும் ஏற்படவில்லை. வானிலை மோசமாக இருந்ததால், பாதுகாப்பு கருதி பெங்களூருக்கு விமானம் திருப்பி விடப்பட்டது. இது சர்வதேசத் தரக்கட்டுப்பாட்டு விதிகளின் படி எடுக்கப்பட்ட ஒரு சாதாரண நடவடிக்கைதான். பயணிகளின் பாதுகாப்பில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்துகொள்வதில்லை" எனத் தெரிவித்துள்ளது.
இறுதியாக, சுமார் 7:30 மணி அளவில் அந்த விமானம் பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரை இறக்கப்பட்டது. அதன் பின்னரே பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். விமான நிறுவனத்துக்கு இது 'ஸ்டாண்டர்ட் ஆபரேட்டிங் ப்ரோசிஜர்' (SOP)... ஆனா, நடுவானில் தவிச்ச பயணிகளுக்கு இது 'லைப் ஆர் டெத்' போராட்டம்!












Click it and Unblock the Notifications