அன்று எடியூரப்பாவிற்கு வந்த சோதனை தான் இன்று எனக்கு.. ஆனா அவர போல கெஞ்ச மாட்டேன்.. குமாரசாமி
Recommended Video
பெங்களூரு: கா்நாடக முதல்வராக எடியூரப்பா இருந்த போது சொந்த கட்சி எம்எல்ஏ-க்கள் மற்றும் அமைச்சர்களால் தரப்பட்ட நெருக்கடி தான் தற்போது எனக்கும் தரப்படுகிறது என ஆதங்கம் வெளியிட்டுள்ளார் குமாரசாமி. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள யாரும் குதிரை வியாபாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள் என்றார்.
ஆளுநர் 2 முறை கெடு விதித்தும் நேற்று கர்நாடக பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை. எனினும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது நேற்று இரண்டாவது நாளாக, கர்நாடக பேரவையில் விவாதம் நடைபெற்றது.

அப்போது மிகுந்த ஆதங்கத்துடன் பேரவையில் பேசினார் மாநில முதல்வர் குமாரசாமி. கடந்த 2004-ம் ஆண்டு நடந்த பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை என்பதை நினைவு கூர்ந்தார்.
அப்போது காங்கிரஸ் - மஜத கூட்டணி அமைத்தது. முதல்வராக தரம்சிங்கும், துணை முதல்வராக சித்தராமையவும் இருந்தனர். நான் முதல் முறையாக எம்எல்ஏ-வாக இதே அவையில் கடைசியில் அமர்ந்திருந்தேன். 20 மாதங்கள் கூட்டணி ஆட்சி நடைபெற்ற நிலையில், எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கருத்து மோதலில் காங்கிரஸ் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றோம்.
அப்போது என்னை சந்தித்த பாஜக-வினர் இன்னும் 40 மாதங்கள் ஆட்சி நடத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே மஜத - பாஜக கூட்டணி அமைக்கலாம் என்றழைத்தனர். அப்போது எனக்கு முதல்வராகும் ஆசை எதுவும் இல்லை. என்னோடு பழகியவர்கள் கேட்டதால் எதிர்பாராத சூழலில் பாஜக-வுடன் கூட்டணி அமைத்தேன்.
பேசியபடி பாஜக-விடம் அதிகாரத்தை அளிக்க முன்வந்தேன். ஆனால் அப்போது பாஜக தலைவர்கள் செய்த குழப்பத்தால், ஆட்சியை இழக்கும் சூழல் வந்தது. அதே போல கடந்த 2008-ம் ஆண்டு நடந்த பேரவை தேர்தலில், பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று சுயேச்சைகளின் ஆதரவில் ஆட்சியமைத்தது.
அப்போது முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்றார். பின்னர் 2009-ம் ஆண்டில் அவரது அமைச்சரவையில் இருந்த சிலரும், எம்எல்ஏ-க்களும் அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர்.
அப்போது அவர் என்ன சூழலில் இருந்தாரோ அதே சூழலில் தான் நான் தற்போது இருக்கிறேன். ஆனால் அதிகாரம் கைவிட்டு போய்விட கூடாது என்பதற்காக, எடியூரப்பா அதிருப்தி எம்எல்ஏ-க்களிடம் அப்போது கெஞ்சினார். தவறு செய்திருந்தால் மன்னித்து விடுங்கள் என்றெல்லாம் சொந்த கட்சி எம்எல்ஏ-க்களிடம் அவர் கெஞ்சிக் கொண்டிருந்தார்.
ஆனால் அதிகாரத்திற்காக நான் யாரிடமும் கையேந்த மாட்டேன். எனது 12 ஆண்டு கால அரசியல் வாழ்வில் சில தவறுகளும் நடந்திருக்கும். ஆனால் கடந்த ஒன்றரை மாதங்களாக கர்நாடக அரசியலில் நடைபெற்று வரும் சம்பவங்கள் ஜனநாயகத்தை சீர்குலைப்பதாக உள்ளது என உணர்ச்சிவசப்பட்டு பேசினார் குமாரசாமி.












Click it and Unblock the Notifications