கர்நாடகாவில் தலித் ஒருவரை துணை முதல்வராக்குங்க.. "இல்லாவிட்டால்" போர்க்கொடி தூக்கும் பரமேஸ்வரா?
பெங்களூர்: கர்நாடகாவில் தலித் ஒருவரை துணை முதல்வராக நியமிக்க வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பரமேஸ்வரா திடீரென கலகக் குரல் எழுப்பியுள்ளார். அமைச்சரவை விரிவாக்கத்தின் போது நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் பரமேஸ்வரா கூறியுள்ளார்.
கர்நாடகாவில் கடந்த 10 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து, முதல்வர் பொறுப்பை பெறுவதில் சித்தராமையாவிற்கும் டிகே சிவக்குமாருக்கும் கடும் போட்டி நிலவியது.

இருவருமே கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர்கள் என்பதோடு, எம்.எல்.ஏக்கள் மத்தியிலும் ஆதரவு பெற்றவர்கள் என்பதால் யாரை முதல்வராக தேர்வு செய்யலாம் என்று காங்கிரஸ் மேலிடம் குழம்பியது.
முன்னாள் முதல்வர் சித்தராமையா விடாப்பிடியாய் தனக்கு முதல்வர் பதவி பெறுவதில் உறுதியாக இருந்தார். டிகே சிவக்குமாரும் இதே நிலைப்பாட்டுடன் இருந்ததால் கடந்த 5 நாட்களாக இரவு பகலாக காங்கிரஸ் மேலிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தது. சித்தராமையா, டிகே சிவக்குமார் இருவரையும் டெல்லிக்கு அழைத்து இரு தினங்களாக ஆலோசனை நடத்தியது.
சோனியா தலையிட்டதால் இறங்கி வந்த டிகே சிவக்குமார் துணை முதல்வர் பொறுப்பை ஏற்க சம்மதம் தெரிவித்தார். இதனால், இழுபறி முடிவுக்கு வந்தது. கர்நாடக முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் பொறுப்பேற்பார்கள் என்று காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வரும் 20 ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தலித் ஒருவருக்கு துணை முதல்வர் பொறுப்பு வேண்டும் என்று கர்நாட காங்கிரசின் மூத்த தலைவர் பரமேஸ்வரா போர்க்கொடி தூக்கியுள்ளார். இது தொடர்பாக பரமேஸ்வரா கூறுகையில், "புதிய முதல்வரை காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது. டி.கே.சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
கட்சி மேலிடம் ஒருவருக்கு மட்டுமே துணை முதல்வர் பொறுப்பை வழங்குவதாக கூறியுள்ளது. இது சரியல்ல. நான் முதல்வர் பதவியை எதிர்பார்த்து இருந்தேன். குறைந்தபட்சம் துணை முதல்வர் பதவியாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். காங்கிரஸ் மீது தலித் மக்கள் ஏராளமான எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். தலித் ஒருவருக்கு முதல்வர் பதவி கொடுக்காவிட்டால் அது கட்சிக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இந்த சூழ்நிலையில் துணை முதல்வர் பதவியை அந்த சமூகத்திற்கு வழங்க வேண்டியது அவசியம். நான் மேலிட தலைவர்களை நேரில் சந்தத்து இதுபற்றி வலியுறுத்துவேன். துணை முதல்வர் அல்லது முதல்வர் பொறுப்பை நான் எதிர்பார்த்தேன். ஆனால் இப்போது கட்சியின் மேலிட முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். அமைச்சரவையில் எந்த அளவு நியாயமாக நடந்து கொள்வார்கள் என்று பொறுத்திருந்து நாம் பார்க்க வேண்டும்" என்றார்.
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கும் பரமேஸ்வரா தலித் தலைவர் ஆவார். கர்நாடக காங்கிரசின் நீண்ட காலம் (8 ஆண்டுகள்) தலைவராக இருந்தவர் என்ற பெருமையை கொண்ட பரமேஷ்வரா, காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சியில் துணை முதல்வராக இருந்து இருக்கிறார். எனவே இந்த முறை தனக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கும் என அவரும் எதிர்பார்த்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் மேலிடம் இதை ஏற்றுக்கொள்ளாததால் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications