பெங்களூருக்கு ‛மஞ்சள் அலர்ட்'.. மே 22ம் தேதி வரை கொட்டப்போகும் கனமழை.. வானிலை மையம் கணிப்பு
பெங்களூர்: பெங்களூரில் பல இடங்களில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கிய நிலையில் காலை வேளைகளில் வேலைக்கு செல்லும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே தான் வரும் 22ம் தேதி வரை பெங்களூருக்கு மிதமானது முதல் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் என்பது விடுக்கப்பட்டுள்ளது. இந்த மஞ்சள் அலர்ட் என்பது என்ன? எவ்வளவு மழை பெய்யும்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் ஆந்திரா, தமிழ்நாட்டில் சில இடங்களில் உருவாகி உள்ள மேலடுக்கு காற்று சுழற்சி மற்றும் தெலுங்கானாவில் இருந்து வடதமிழ்நாடு வரை பரவியுள்ள தாழ்வு மண்டலம் காரணமாக தென்னிந்தியாவின் பல்வேறு இடங்களில் ஈரப்பதம் நிலவி வருகிறது. இது மழைப்பொழிவையும் கொடுக்கிறது.
அந்த வகையில் பெங்களூரில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்றைய தினம் பெங்களூரின் பல இடங்களில் கனமழை பெய்தது. ராஜாஜி நகர், சாந்தி நகர், சில்க் போர்ட், ஹொரமாவு, எச்பிஆர் லே-அவுட், கெங்கேரி, மாரத்தஹள்ளி, கொட்டிகேபாளையா மற்றும் அதனை சுற்றிய இடங்களில் கனமழை பெய்தது.

கர்நாடக மாநில தேசி பேரிடர் கண்காணிப்பு மையத்தின் கணக்குப்படி கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கெங்கேரியில் 132 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது. இதற்கு அடுத்ததாக கோரமங்களாவில் 96.5 மில்லி மீட்டர், எச்ஏஎல் ஏர்போர்ட்டில் 93 மிமீட், கொட்டிகேபாளையாவில் 92.5 மில்லி மீட்டர், வித்யாபீடமில் 92.5 மில்லி மீட்டர், மாரத்தஹள்ளியில்91.5 மில்லி மீட்டர் பெய்துள்ளது. இதுதவிர 20க்கும் அதிகமான வார்டுகளில் 70 மில்லி மீட்டரை விட அதிக மழை பெய்துள்ளது.
சாந்தி நகரில் உள்ள பிஎம்டிசி டெப்போவில் தண்ணீர் மிதக்கிறது. அங்குள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் தரை தளம் மழை நீரில் மூழ்கியுள்ளது. ஹோரமாவு ஏரியாவை சுற்றிய பல இடங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. இன்னும் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் தற்போது பெங்களூரில் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வரும் 22ம் தேதி வரை பெங்களூரின் மஞ்சள் அலர்ட்டை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதன்படி பார்த்தால் வரும் வியாழக்கிழமை வரை பெங்களூரில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பொதுவாக மழைக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும்போது மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கும். 24 மணி நேரத்தில் குறைந்தபட்சம் 64.5 மில்லி மீட்டர் முதல் அதிகபட்சமாக 115.5 மில்லி மீட்டர் வரை மழை பெய்யலாம் இடி, மின்னலுக்கும் வாய்ப்பு ஏற்படலாம்.
இதன் காரணமாக பெங்களூர் மாநகராட்சி, தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் தற்போதைய வானிலை நிலவரம் என்பது தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது. முன்னதாக நேற்றைய தினம் பெய்த கனமழையின் காரணமாக பெங்களூர் மட்டுமின்றி பெங்களூர் புறநகர், கோலார், சிக்பள்ளாப்பூர், துமகூரு, மண்டியா, மைசூர், ஹாசன், குடகு, பெலகாவி, பீதர், ராய்ச்சூர், யதாகிரி, தாவணகெரே, சித்ரதுர்கா உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது . இதனால் காவிரி ஆற்றில் பாயும் தண்ணீரின் அளவும் அதிகரித்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications