கர்நாடகாவில் பேருந்து டிக்கெட் கட்டணம் 3 மடங்கு உயர்வு... திகைத்து நின்ற தொழிலாளர்கள்
பெங்களூரு: ஊரடங்கால் பணிபுரியக் கூடிய இடங்களிலேயே சிக்கித் தவித்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் ஒரு முறை பயண அடிப்படையில் கர்நாடகாவில் பேருந்துகளை இயக்க அம்மாநில அரசு சிறப்பு அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து பெங்களூரு மாநகரில் தங்கி கட்டிடப்பணிகள், தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்த பலர் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமையன்று குவியத்தொடங்கினர். சுமார் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்துகளில் இடம்பிடிக்க முண்டியடுத்துக்கொண்டு நின்ற காட்சிகளை காண முடிந்தது. சமூக விலகலை கடைபிடிக்குமாறு மத்திய மாநில அரசுகள் எவ்வளவோ எடுத்துக்கூறியும் அதை காற்றில் பறக்கவிட்டப்படி சொந்த ஊர் திரும்புவதிலேயே தொழிலாளர்கள் குறியாக இருந்தனர்.

பெங்களூரில் இருந்து பாகல்கோட்டிற்கு ரூ. 1,311 கட்டணமாகவும், பெல்லாரிக்கு ரூ.884 கட்டணமாகவும் வசூலிக்கப்பட்டது. இதேபோல் வட கர்நாடக பகுதிகளான பெலகாவிக்கு பெங்களூரில் இருந்து செல்ல கே எஸ் ஆர் டி சி பேருந்தில் ரூ.1,478 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. பிதாருக்கு ரூ.1,984-ம், கலபுருகிக்கி ரூ.1,619-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இது வழக்கமான கட்டணத்தை விட பன்மடங்கு உயர்த்தப்பட்ட கட்டணம் ஆகும்.

இதேபோல் பெங்களூரில் இருந்து தெற்கு கர்நாடக பகுதிகளான ஹசனுக்கு செல்ல ரூ.538-ம், மைசூருக்கு ரூ.390-ம், சிக்மகளூருக்கு ரூ.695-ம் பேருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இந்த கட்டண நிர்ணயித்தால் புலம் பெயர் தொழிலாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்ததோடு திகைப்பும் ஆளாகினர். இருப்பினும் வேறு வழியின்றி அந்த கட்டணத்தை செலுத்தி சொந்த ஊர் சென்று சேர்ந்தால் போதும் என்ற மனநிலையில் பலரும் புறப்பட்டனர். இதனிடையே 55 பேர் அமரக்கூடிய பேருந்தில் 30 பேரை மட்டுமே கே எஸ் ஆர் டி சி நிர்வாகம் அனுமதித்தது.

பேருந்து கட்டண உயர்வு குறித்து வேதனை தெரிவித்த தொழிலாளி ஒருவர், சர்ஜாபூரில் இருந்து பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையத்திற்கு நடந்தே வந்ததாகவும், இங்கு வந்து பார்த்தால் பேருந்துக் கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார். மேலும், கடந்த ஒரு மாதமாக வேலையின்றி இருக்கும் நாங்கள் இவ்வளவு பெரிய தொகையை கட்டணமாக எப்படி செலுத்த முடியும் என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மேலும், 500-க்கும் மேற்பட்டோர் கூடியுள்ள நிலையில் பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளையும் கே எஸ் ஆர் டி சி நிர்வாகம் செய்துகொடுக்கவில்லை என புகார் தெரித்தனர்.












Click it and Unblock the Notifications