ஆர்எஸ்எஸ்ஸில் விரைவில் முஸ்லிம், கிறிஸ்தவர்கள்! காங்., பாஜக இடையே விவாதம்! கர்நாடக சட்டசபையில் அனல்
பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து காங்கிரஸ், பாஜக இடையே அனல்பறக்கும் விவாதம் நடந்தது. அப்போது பாஜகவை சேர்ந்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஎஸ் ஈஸ்ரவரப்பா, ‛‛ஆர்எஸ்எஸ் அமைப்பில் விரைவில் முஸ்லிம், கிறிஸ்தவர்கள் இணைவார்கள்'' என பேசியதற்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். இந்நிலையில் தற்போது கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது.
இந்த கூட்டத்தொடரில் மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் மேகதாது அணை தொடர்பாக சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சித்தராமையா பேச்சு
இதையடுத்து காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் இடையே பல்வேறு விஷயங்கள் தொடர்பாக விவாதங்கள் நடைபெற்றது. அப்போது கர்நாடக சட்டசபையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி(காங்கிரஸ்) தலைவருமான சித்தராமையா பேசினாார். அவர் சில பாஜக தலைவர்கள் மற்றும் அமைச்சர்களுடனான தனது நட்பு குறித்து கூறினார். மேலும் ஆர்எஸ்எஸ் அமைப்பு பற்றியும் பேசினார்.

பரஸ்பர மரியாதை
இதுகுறித்து அவர் பேசுகையில், "அரசியலில் எந்த சித்தாந்தத்தை பின்பற்றினாலும் கூட ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் மரியாதை கொடுக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் இடையேயான தனிப்பட்ட உறவை கடந்து தான் பாஜக, ஆர்எஸ்எஸ், காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகள் வரும்'' என்றார்.

எங்கள் ஆர்எஸ்எஸ்
சித்தராமையாவின் இந்த பேச்சுக்கு கர்நாடக சட்டசபை சபாநாயகர் விஸ்வேஸ்வர் காகேரி ஹெக்டே (பாஜக), ‛‛ஏன் திடீரென்று தேவையில்லாமல் எங்கள் ஆர்எஸ்எஸ் பற்றி பேசுகிறீர்கள்?'' என கேள்வி எழுப்பினார். இதற்கு சித்தராமையா விளக்கமளிக்க துவங்கினார். இந்த வேளையில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ஜமீர் அகமது கான் குறுக்கீட்டு, ‛சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து கொண்டு எங்கள் ஆர்எஸ்எஸ் எனக்கூறுவது சரியில்லை'' என்றார். இதற்கு சபாநாயகர், ‛‛நிச்சயமாக, ஆர்எஸ்எஸ் எங்களுக்கானது. நான் ஆர்எஸ்எஸ்யில் இருந்து வந்தவன். இதனால் ங்கள் ஆர்எஸ்எஸ் என கூறுவதில் தவறு என்ன இருக்கிறது?. விரைவில் நீங்கள் அதை உங்களுக்கான ஆர்எஸ்எஸ் என அழைக்க வேண்டியது இருக்கும்'' என்றார்.

முக்கிய பதவிகள் யார்
இதற்கு காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் ஜமீர் அகமது கான், யுடி காதர், பிரியங்க் கார்கே உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த வேளையில் பாஜகவின் வருவாய்த்துறை அமைச்சர் ஆர் அசோக் குறுக்கீட்டு, ‛‛ ஒருவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சரி, அனைத்து முக்கிய அரசியல் பதவிகளிலும் ஆர்எஸ்எஸ்யில் இருந்து வரும் தலைவர்கள் தான் தற்போது அங்கம் வகிக்கின்றனர்'' என்றார். இது இந்திய நாட்டுக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டம் என காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூறினார்.

விரைவில் முஸ்லிம், கிறிஸ்தவர்கள்
இந்த வேளையில் பாஜவின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும் சர்சசைக்கு பெயர் பெற்றவருமான கேஎஸ் ஈசுவரப்பா குறுக்கிட்டு பேசினார். அவர் கூறுகையில், ‛‛இன்று இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் தங்களை இணைத்து கொள்வார்கள். இதில் எந்த சந்தேகமும் இல்லை'' என கூறினார். இதற்கும் காங்கிரஸ் தரப்பில் மறுப்பு தெரிவித்த எம்எல்ஏக்கள் அவருக்கு எதிர்ப்பும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications