இனி தம் அடிச்சா ஆப்பு கன்ஃபார்ம்.. புகைப் பிரியர்களின் வயிற்றில் புளியைக் கரைத்த கர்நாடக அரசு
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் புகையிலை பொருட்களைப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
சமீபகாலமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொது இடங்களில் புகைப் பிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. புகைப் பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும். ஸ்மோக்கிங் காசஸ் கேன்சர் என எழுதிப் போட்டாலும், வாசகங்களை வாசித்தாலும் புகைப் பிடிப்பவர்கள் அதனைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

புகைப்பிடித்தல் அதனைப் பிடிப்பவர்களை மட்டுமல்லாமல் அருகில் இருப்பவர்களின் நுரையீரலையும் பதம் பார்த்துவிடும். பொது இடங்களில் புகைப் பிடிக்க கூடாது என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதனை பலரும் மீறியே வருகின்றனர்.
சினிமா தியேட்டர், சாலையோரங்கள், பள்ளி, கல்லூரிகள் முன்பு, பெட்டிக் கடைகள், டீ கடைகள், பேக்கரிகள் என அனைத்துப் பகுதிகளையும் புகைப் பிரியர்கள் ஆக்கிரமித்து வைத்திருப்பார்கள்.
இதில் சிலர் ஒருபடி மேலே போய் பேருந்து, ரயில்கள், இருசக்கர வாகனம், கார், லாரி என எந்த வாகனத்தில் சென்றாலும் அதில் ஆறாம் விரலாய் சிகரெட்டுடன் தான் பயணிக்கின்றனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் பலர் புகையிலைப் பொருள்களை தெரியவந்த நிலையில், அம்மாநில அரசு அவர்களுக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர் ஒன்றைப் போட்டு அவர்கள் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.
இதுகுறித்து, கர்நாடக அரசின் பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: கர்நாடக அரசு அலுவலகங்களில் விதிமுறைகளை மீறி அலுவலக வளாகத்தில் புகைப்பிடிப்பது, புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவது குறித்து அரசின் கவனத்துக்கு வந்துள்ளது.
இதையடுத்து, அரசுப் பணியாளர்களின் உடல் நலம், பொதுமக்களின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அரசு அலுவலக வளாகங்களில் புகைப்பிடித்தல், புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
புகைப்பிடிக்க கூடாது, புகையிலைப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என்பது போன்ற விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகளை அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் வைக்கப்பட வேண்டும்.
இந்த உத்தரவை மீறி அரசு அலுவலகம் அல்லது அரசு அலுவலக வளாகங்களில் புகையிலை பொருட்களான குட்கா, பான் மசாலா போன்றவற்றை உட்கொள்வது மற்றும் புகைப்பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications