"மெகா ஊழல்!" கர்நாடக பாஜக அரசுக்கு நெருக்கடி.. நேரடியாக பிரதமருக்கு கடிதம் எழுதிய 13,000 பள்ளிகள்
பெங்களூர்: பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடக அரசைக் குற்றஞ்சாட்டி சுமார் 13 ஆயிரம் பள்ளிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரு சங்கங்கள் பள்ளிகள் சார்பில் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதி உள்ளனர்.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இப்போது அங்கு பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சியில் உள்ளது.
கர்நாடகாவில் எப்படியாவது ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்று பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. இருப்பினும், இப்போது வரை வரும் தகவல்கள் எதுவும் பாஜகவுக்குச் சாதகமாக இல்லை.
போலீஸ் ஸ்டேஷன்களில் வரவேற்பாளர்கள்! சொன்னதை செய்த முதல்வர் ஸ்டாலின்! 912 பேருக்கு பணி ஆணை!
கர்நாடகா
கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை அரசு மீதான அதிருப்தி தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. பசவராஜ் பொம்மை அரசு மீது அதிருப்தி அதிகரித்து வருவது பாஜகவுக்கும் தெரியும். இதன் காரணமாகவே கடந்த சில மாதங்களாகவே முதல்வரை மாற்றுவது குறித்து பாஜக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வந்தது. இருப்பினும், தேர்தலுக்கு சில காலத்திற்கு முன் முதல்வரை மாற்றினால் அது சிக்கலை ஏற்படுத்தலாம் என்பதால் பாஜக நிதானமாகவே முடிவெடுத்து வருகிறது.
பசவராஜ் பொம்மை
ஏற்கனவே, கர்நாடக அரசு மீது தொடர்ச்சியாகப் பல ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில் கர்நாடகாவில் உள்ள 13,000 பள்ளிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரு சங்கங்கள் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு மீது பெரிய ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்தி உள்ளன. இது தொடர்பாக அவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதமும் எழுதியுள்ளனர்.
கடிதம்
கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரச் சான்றிதழ் வழங்கக் கல்வித் துறை லஞ்சம் கேட்பதாகத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் சங்கம் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதி உள்ளனர். அந்த கடிதத்தில், "பகுத்தறிவற்ற, பாரபட்சமற்ற விதிமுறைகளைப் பின்பற்றி தனியார்ப் பள்ளிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கின்றனர். இதில் பெரிய ஊழல் நடந்துள்ளது இது குறித்து மாநில கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷிடம் பலமுறை புகார்கள் அளிக்கப்பட்டு உள்ளன.
பதவி விலக வேண்டும்
இருப்பினும், அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த குளறுபடிகளுக்குப் பொறுப்பு ஏற்று மாநில கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும். மாநில கல்வி அமைப்பின் உண்மையான பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு தீர்வு அளிக்கும் நிலையில் கல்வித் துறை இல்லை. கல்வித் துறைக்கு அமைச்சராக இருந்த இரு பாஜக அமைச்சர்களும் எளிய மக்களின் பிள்ளைகள் படிக்கும் பட்ஜெட் பள்ளிகளுக்கு நிறையச் சேதத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
வணிகமயமாக்கி விட்டனர்
அதற்குப் பதிலாக லாப நோக்கில் இயங்கும் பெரிய பள்ளிகளுக்கு அனுமதி அளித்த கல்வியை வணிகமயமாக்கி விட்டனர். இதனால் ஒவ்வொரு பெற்றோரும் குழந்தையின் படிப்பிற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த கல்வி ஆண்டு சில நாட்களில் தொடங்கும் நிலையில், இன்னும் கூட அரசின் புத்தகங்கள் பள்ளிகளைச் சென்றடையவில்லை.
நடவடிக்கை தேவை
பெற்றோருக்குச் சுமையை அதிகப்படுத்தாமல் உரிய விதிமுறைகளை உண்டாக்கி அரசு மற்றும் தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் எண்ணம் எதுவும் கல்வி அமைச்சருக்கு இல்லை என்றே தெரிகிறது. இந்த குற்றச்சாட்டுகளைப் பரிசீலித்து, கர்நாடக கல்வி அமைச்சகம் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதி உள்ளனர்.