திடீரென பெங்களூர் விமான நிலையத்தில் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள்.. குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்
பெங்களூர்: காவிரி நீரை தமிழகத்திற்கு தர கூடாது என்று கூறி, கன்னட அமைப்புகள் இன்று கர்நாடகா முழுவதும் பந்த் போராட்டத்தை தொடங்கியுள்ளன. இந்நிலையில் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு திடீரென அவர் நுழைய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காவிரி நீரை பெறுவதற்கு தமிழ்நாடு தொடர்ந்து கர்நாடக மாநிலத்திடம் போராடி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் விநாடிக்கு 25,000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று தமிழ்நாடு வலியுறுத்தியிருந்தது. இதனை கர்நாடகா ஏற்கவில்லை. எனவே உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடியது. அதேபோல கர்நாடக அரசும் நீதிமன்றத்தை நாட காவிரி மேலாண்மை ஆணையமே இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆணையமானது, விநாடிக்கு 5,000 கனஅடி நீரை திறக்க கர்நாடகாவுக்கு கூறியது. ஆனால் கர்நாடக இதை ஏற்கவில்லை. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை இல்லாததாலும், ஒட்டுமொத்தமாக பருவமழை குறைந்ததாலும் நீர் வரத்து குறைவாக இருக்கிறது என்று கூறி இந்த நீரை திறக்க மறுத்துவிட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றமானது, காவிரி மேலாண்மை ஆணையம் வழிகாட்டிய அளவுக்கு தண்ணீரை திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இப்படி இருக்கையில் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 26ம் தேதியன்று காணொலி வாயிலாக காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு 18 நாட்கள் தொடர்ச்சியாக விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால் கர்நாடக அரசு இந்த உத்தரவுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. அதுமட்டுமல்லாது மழை இல்லாததால் இவ்வளவு நீரை திறக்க முடியாது என்றும் கூறியுள்ளது.
மறுபுறம் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று பல்வேறு கன்னட அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இன்று மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்தை கன்னட அமைப்புகள் நடத்துகின்றன. பந்த் காரணமாக தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் கர்நாடக எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல இந்த போராட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழக்கூடாது என காவல்துறை பெங்களூர் நகரத்திற்கு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பாதுகாப்பு பணியில் சுமார் 80 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இருப்பினும் கன்னட அமைப்பினர் அதிகாலை முதலே போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். மாண்டியாவில் காவிரி ஆற்றில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என கூட்டமாக இறங்கி தமிழ்நாட்டிற்கு காவிரி தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர ஹுப்ளி, பெங்களூர், அத்திபள்ளி, மாண்டியா நகர் என மாநிலம் முழுவதும் பரவலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தை முற்றுகையிட்டும் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் திடீரென விமான நிலையத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் போராட்டக்கார்களை கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொறுத்த அளவில், போதுமான அளவில் காவலர்கள் இருப்பதாகவும், அசம்பாவிதங்கள் நடக்காமல் பார்த்து வருவதாகவும் பெங்களூர் நகர துணை கமிஷனர் சேகர் ஹெச் தெக்கண்ணவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications