புல்புல் பறவையில் பறந்து வந்தார் சாவர்க்கர்.. கன்னட பாட புத்தகத்தில் வெளியீடு.. கர்நாடகாவில் சர்ச்சை
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கன்னட மொழி பாட புத்தகத்தில் சாவர்க்கர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தபோது தனது அறைக்கும் வரும் புல் புல் பறவையின் மேலே அமர்ந்து தாய் மண்ணுக்கு வந்து சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது மாநில அரசியலில் புதிய விவாதப்பொருளாக மாறியுள்ளது.
இந்துத்வா சித்தாந்தவாதியான சவார்க்கர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த போது புல் புல் பறவையில் அமர்ந்து பறந்து வந்ததாக 8 ஆம் ஆம் வகுப்பு கன்னட மொழி புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தற்போது அம்மாநில அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புல் புல் பறவை மீது அமர்ந்து...
கர்நாடக மாநில கல்வி பாடத்திட்டத்தில் உள்ள 8 ஆம் வகுப்பு கன்னட மொழி பாடப்புத்தகத்தில்தான் சவார்க்கர் பற்றிய இந்த கருத்து இடம் பெற்றுள்ளது. அதில், ''அந்தமான் சிறைச்சாலையில் சவார்க்கர் அடைக்கப்பட்டு இருந்த சிறிய அறையில் சிறிய துளை கூட கிடையாது. ஆனால், அவரது அறைக்கு எப்படியோ ஒரு புல் புல் பறவை வந்து விடும். அந்த பறவையின் சிறகின் மீது ஏறி அமரும் சவார்க்கர் தினமும் தாய் மண்ணிற்கு வந்து விட்டு செல்வார்'' என்ற தகவல் இடம் பெற்றுள்ளது.

கடும் விமர்சனங்கள்
சவார்க்கர் பற்றிய இந்த கருத்துதான் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மாணவர்களை குழப்பும் வகையில் இந்த பத்தியில் உள்ள தகவல் இருப்பதாகவும் உரிய விளக்கம் கொடுக்கப்பட வேண்டும் என்று விமர்சகர்கள் கர்நாடக அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இது அபத்தமானது என்று தெரிவித்துள்ள பாடத்திட்டத்தை வகுக்கும் குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள், அழகாக உருவகப்படுத்தப்பட்ட ஒரு உரைநடைபகுதி என்று விளக்கம் அளித்துள்ளனர்.

காங்கிரஸ் விமர்சனம்
ஆனால், இது உருவகம் போல தெரியவில்லை என்று தெரிவித்துள்ள கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரியங்க் கர்கே, தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது; 'சவார்க்கர் சிறையில் அடைக்கப்பட்ட அறையில் ஒரு சிறிய துளை கூட கிடையாது. ஆனால், அங்கு வரும் புல் புல் பறவையில் ஏறி தினமும் தனது தாய்மண்னிற்கு செல்வார் என்று உள்ளது. உருவகத்தை அர்த்தம் கொள்வது போல இந்த பாடம் இல்லை' என்று தெரிவித்துள்ளார்.

பாடநூல் திருத்த தலைவர் விளக்கம்
தற்போது கலைக்கப்பட்டுள்ள கர்நாடக பாடநூல் திருத்தக் குழுவின் தலைவர் ரோகித் சக்ரதிர்தா இது குறித்து அளித்த விளக்கத்தில், 'சவார்க்கர் குறித்த அந்த வரியானது ஒரு பேச்சு உருவகமே தவிர, சாவர்க்கர் புல்புல் மீது பறந்தார் என்ற நேரடியான கூற்று கிடையாது. பேச்சு உருவகம் என்றால் என்னவென்று புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு ஒரு சிலரின் அறிவுத்திறன் தரம் தாழ்ந்து போய் விட்டதோ என எனக்கு வியப்பு அளிக்கிறது' என்று சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications