விஜய் முதல்வரானது எனக்கு சத்தியமாக பொறாமை இல்லை! ஆனால்... நடிகர் ரஜினிகாந்த் ஓபனாக விளக்கம்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இன்று போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்து கடந்த சில நாட்களாக தன்னைச் சுற்றி பரவி வந்த அரசியல் சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்களுக்கு நேரடியாக விளக்கம் அளித்துள்ளார். குறிப்பாக நடிகர் விஜய் அரசியலில் பெரிய வெற்றி பெற்ற பிறகும் ரஜினிகாந்த் அவருக்கு உடனடியாக வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பதையே வைத்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் கிளம்பியிருந்தன. அதற்கு தற்போது ரஜினிகாந்தே நேரடியாக பதில் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி பற்றிய சர்ச்சை
தமிழக அரசியல் களத்தில் விஜயின் வெற்றி பெரிய பேசுபொருளாக மாறிய நிலையில், "ரஜினிகாந்த் வாழ்த்து சொல்லாதது ஏன்?", "அரசியலில் இருந்து விலகிய பிறகும் விஜய் உடைய வெற்றி கொள்ள முடியவில்லை?" என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்தன. சிலர் இதை நேரடியாக பொறாமையுடன் இணைத்துப் பேசினர்.
குறிப்பாக, விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்காமல் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததையே சிலர் ஒப்பிட்டு விமர்சித்தனர். "விஜய் வெற்றி பெற்றது ரஜினிக்கு பிடிக்கவில்லை", "அதே துறையில் இருந்து வந்த நடிகர் அரசியலில் சாதித்ததால் மனவருத்தம்" என்ற கருத்துகளும் சமூக வலைதளங்களில் பரவின.
ரஜினிகாந்த் பேச்சு
இந்த சூழ்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், இந்த விமர்சனங்களை தெளிவாக மறுத்துள்ளார். "விஜய் அரசியலில் வந்து வெற்றி பெற்றது எனக்கு பொறாமைன்னு சொல்லுறாங்க. சத்தியமா அப்படி ஒன்றும் கிடையாது. அவர் என்னுடைய துறையில் இருந்து வந்திருக்கிறார். அவர் மீது நான் எப்படி பொறாமைப்பட முடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
வதந்திக்கு பதில் கொடுத்த ரஜினிகாந்த்
அதோடு, விஜயின் வெற்றியை தாம் வியப்புடன் பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார். "எனக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சிதான் இருந்தது. இத்தனை பெரிய அரசியல் கட்சிகளை எதிர்த்து வெற்றி பெறுவது சாதாரண விஷயம் கிடையாது. அது எல்லோருக்குமே ஆச்சரியம், அதிர்ச்சி, மகிழ்ச்சி ஆகிய உணர்வுகளை கொடுத்தது. அதே மனநிலையில்தான் நானும் இருந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்கு ரஜினிகாந்த் விளக்கம்
ரஜினிகாந்தின் இந்த விளக்கம் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. பலரும் "இத்தனை நாள் பேசப்பட்ட விவகாரத்துக்கு இப்போது நேரடி பதில் கிடைத்துவிட்டது" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், சிலர் "ஆரம்பத்திலேயே இந்த விளக்கம் வந்திருக்கலாம்" என்றும் கூறி வருகின்றனர்.
அரசியலில் இருந்து விலகிய பிறகும் ரஜினிகாந்தைச் சுற்றி அரசியல் விவாதங்கள் அடிக்கடி எழுவது புதிய விஷயம் அல்ல. அவரது ஒவ்வொரு சந்திப்பும், ஒவ்வொரு கருத்தும் அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவது வழக்கமாகி விட்டது. இந்த சூழ்நிலையில் விஜயின் அரசியல் எழுச்சி வந்ததால், ஒப்பீடுகளும் இயல்பாக அதிகரித்தன. குறிப்பாக தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய நட்சத்திரங்கள் என்பதால் இந்த விவாதம் இன்னும் பெரிதாகியது.
விஜய் பற்றி ரஜினிகாந்த் விளக்கம்
ஏற்கனவே நேற்று நடிகர் ரவி மோகன் தனது தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சனைகள் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசியது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அந்த பரபரப்பு அடங்காத நிலையில் இன்று ரஜினிகாந்த் தன்னை சுற்றிய சர்ச்சைகளுக்கு நேரடியாக பதில் அளித்திருப்பது சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரஜினிகாந்தின் இந்த பதிலால் குறைந்தபட்சம் 'பொறாமை' என்ற குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சமூக வலைதள விவாதங்கள் இத்துடன் முடிவடைகிறதா? அல்லது புதிய கோணத்தில் தொடருமா? என்பதைக் காத்திருந்து பார்க்க வேண்டும்.













Click it and Unblock the Notifications