போராட்டத்தில் குதித்த ஐடி ஊழியர்கள்! கர்நாடக அரசு கொண்டு வந்த குளறுபடி சட்டம்.. பெங்களூரில் சலசலப்பு
பெங்களூர்: திடீர் வேலை நீக்கத்திற்கும், கூடுதல் பணி நேரத்திற்கும், உழைப்பு சுரண்டலுக்கும் பெயர் பெற்றவைதான் ஐடி நிறுவனங்கள். இந்நிறுவனங்கள் தொழிலாளர் நலச்சட்டங்களை சரியாக பின்பற்றுகிறதா? என்பதை நிறுவனம் தரப்பிலிருந்தே அறிக்கை தாக்கல் செய்ய கர்நாடக அரசு சட்ட திருத்தம் செய்திருக்கிறது. இதற்கு எதிராகவே ஐடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
கர்நாடகாவில் ஐடி நிறுவனங்கள் அதிகம். இந்த நிறுவனங்கள் விதிமுறைகளை பின்பற்றுவது மிக முக்கியமானது. இந்நிறுவனங்களில், வருங்கால வைப்பு நிதி, இஎஸ்ஐ, விடுமுறை, கூடுதல் நேரம் வேலை செய்ததற்கான சரியான ஊதியம், பெண்களுக்கு பாதுகாப்பு, போதுமான சுகாதார வசதிகள் ஆகியவை இருக்கிறதா? தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப்படுகிறதா? என்பதை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சான்றிதழை வழங்குவார்கள்.

சர்வதேச அளவில் அல்லது பெரிய ஒப்பந்தங்களை பெறும் போது இந்தச் சான்றிதழ்கள் நிறுவனத்திற்கு பயன்படும். சான்றிதழை வைத்திருக்கும் நிறுவனங்களுடன்தான் பெரிய நிறுவனங்கள் ஒப்பந்தங்களை போடும். அந்த வகையில் தொழிலாளர் நலனை பாதுகாத்து சான்றிதழை பெறுவதில் நிறுவனங்கள் சரியாக இருக்கும்.
ஆனால், தற்போது கர்நாடக அரசு இந்த சான்றிதழ் விவகாரங்களில் சிறிய திருத்தங்களை செய்திருக்கிறது. அதன்படி இனி தொழிலாளர் நல வாரிய அதிகாரிகள் நிறுவனங்களில் ஆய்வு செய்ய மாட்டார்கள். அதற்கு பதில் நிறுவனங்களே தங்களுடைய நிலைமை குறித்து சுயமாக சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என கர்நாடக அரசு கூறியுள்ளது.
அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து சான்றிதழ் கொடுக்கும்போதே ஏராளமான குளறுபடிகள் ஐடி நிறுவனங்களில் நடந்து வருகின்றன. கூடுதல் பணி சுமை, கூடுதல் நேரங்களுக்கு போதுமான ஊதியம் வழங்காதது, விடுப்பு மறுப்பது, உழைப்பு சுரண்டல் ஆகியவை ஐடி நிறுவனங்களில் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இப்படி இருக்கையில் சுயமாகவே ஐடி நிறுவனங்கள் சான்றிதழ்களை கொடுக்க வேண்டும் என்று அரசு கூறுவதன் மூலம், தொழிலாளர் நல உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து அரசு தன்னை விடுவித்துக் கொள்கிறது என்று குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து கர்நாடக ஐடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைக்கு கர்நாடக மாநில தகவல் தொழில்நுட்ப/தகவல் தொழில்நுட்ப சேவை ஊழியர்கள் சங்கம் கடும் கண்டனங்களை தெரிவித்திருக்கிறது. பொதுச் செயலாளர் சுஹாஸ் அடிகா இது குறித்து கூறுகையில், "சுய-சான்றிதழ் என்பது, தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துவதற்கான சட்டப்பூர்வ பொறுப்பிலிருந்து அரசு பின்வாங்குவதாகும். இம்முறையால், அரசு மற்றும் தொழிலாளர் துறை தங்களின் கடமைகளைத் துறந்து, நிறுவனங்கள் தொழிலாளர் சட்டங்களை மீறுவதற்கு சுதந்திரம் அளிக்கின்றன" என்று தெரிவித்திருக்கிறார்.
அதேபோல, ஐ.டி மற்றும் ஐ.டி.இ.எஸ் ஜனநாயக ஊழியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுமன் தாஸ், "முன்னர் தொழிலாளர் துறை ஆவணங்களை ஆய்வு செய்து, நிறுவனங்கள் தொழிலாளர் சட்டங்களைப் பின்பற்றுகின்றனவா என்பதையும் ஊழியர் உரிமைகளைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கின்றனவா என்பதையும் உறுதிப்படுத்தும். இப்போது, சட்டங்களை மீறும் நிறுவனங்கள் தாங்களாகவே அதனை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கிறீர்களா? இது நிறுவனங்களுக்கு எந்த தொழிலாளர் சட்டங்களையும் பின்பற்ற வேண்டியதில்லை என்று நேரடியாகச் சொல்வது போலாகும்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications