தங்கம், வைரம், 11,000 பட்டுப்புடவை - கர்நாடக கஜானாவில் 19 ஆண்டாக முடங்கியுள்ள ஜெயலலிதாவின் பொருட்கள்
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு கர்நாடக அரசு கருவூலத்தில் 19 ஆண்டுகளாக வைக்கப்பட்டு இருக்கும் பல கோடி மதிப்பிலான பொருட்களின் விபரம் வெளியிடப்பட்டு இருக்கிறது.
அதிமுகவை சேர்ந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து உச்சநீதிமன்றம் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு சிறை தண்டனை விதித்தது.
மூவரின் தண்டனை காலம் முடிவடைந்து தற்போது அவர்கள் வெளியில் உள்ளனர். தீர்ப்பு வெளியாவதற்கு முன்பே ஜெயலலிதா உயிரிழந்ததால் அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

ஜெயலலிதா கைது
1996 ஆம் ஆண்டு இந்த சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை தொடங்கிய உடனே ஜெயலலிதாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான தங்க, வைர ஆபரணங்கள், பட்டுப்புடவைகள், காலணிகள், கை கடிகாரங்கள் போன்ற பல கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அடுத்த சில மாதங்களிலேயே ஜெயலலிதா கைது செய்யப்பட்டு அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கர்நாடக கருவூலத்துக்கு மாற்றம்
தொடக்கத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த இந்த வழக்கு பின்னர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதன் காரணமாக ஜெயலலிதா வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட விலை உயர்ந்த அனைத்து பொருட்களும் கர்நாடக மாநில அரசு கருவூலத்திற்கு மாற்றப்பட்டன. 26 ஆண்டுகளுக்கு முன் பறிமுதல் செய்யப்பட்ட இந்த பொருட்கள் கடந்த 19 ஆண்டுகளாக கர்நாடகாவில் உள்ளன.

நீதிபதிகளுக்கு கடிதம்
இந்த நிலையில், பெங்களூருவை சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் நரசிம்மமூர்த்தி என்பவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்டு கர்நாடக கருவூலத்தில் முடங்கிக்கிடக்கும் பொருட்களை ஏலத்தில் விட வேண்டும் எனவும், அதில் கிடைக்கும் பணத்தை மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தங்க, வைர ஆபரணங்கள்
இந்த நிலையில், கரூவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் பொருட்களின் விபரம் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில், தங்கம், வைரம், மரகதம், முத்துக்கள், ரூபி, ரத்தின கற்கள், மூக்குத்திகள், முருக்கு சங்கிலிகள், தங்க காசு மாலை, மோதிரம், தங்க பெல்ட், தங்க சாமி சிலைகள், தங்க கீ செயின், தங்க மாம்பழம், தங்க கைக்கடிகாரம், வீர வாள்கள், மயில் சிலைகள், பன்னீர் சொம்பு, சந்தன கிண்ணம், தங்க தட்டு, தங்க பேனா, தங்க அட்டை, முதுகுவலி பெல்ட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

பட்டுப்புடவை, ஃபர்னிசர்கள்
அதேபோல், 11,344 பட்டுப்புடவைகள், 750 ஜோடி செருப்புகள், 91 கை கடிகாரங்கள், 27 சுவர் கடிகாரங்கள், 44 குளிர்சாதன எந்திரங்கள், 33 தொலைபேசிகள், 131 சூட்கேஸ்கள், 86 மின்விசிறிகள், 20 சோபா செட்கள், 81 அலங்கார விளக்குகள், 9 உடை அலங்கார டேபிள்கள், 31 மேஜைகள், 24 மெத்தைகள், 34 டீப்பாய்கள், 146 அலங்கார நாற்காளிகள் போன்றவை உள்ளன.

தொலைக்காட்சிகள், கேசட்டுகள்
மேலும் 215 கண்ணாடி டம்ளர்கள், 3 இரும்பு பெட்டகங்கள், 31 உடை அலங்கார டேபிள் கண்ணாடிகள், 12 குளிர்பதன பெட்டிகள், ரூ.1.60 லட்சம் மற்றும் ரூ.32,688 ரொக்கம், 10 டிவிக்கள், 8 வி.சி.ஆர்கள், ஒரு வீடியோ கேமரா, 4 சி.டி. பிளேயர்கள், 2 ஆடியோ பிளேயர்கள், 24 ரேடியோக்கள், 1,040 வீடியோ கேசட்டுகள் போன்ற பல கோடி மதிப்பிலான பொருட்கள் கர்நாடக கருவூலத்தில் முடங்கி இருக்கின்றன.












Click it and Unblock the Notifications