கர்நாடக தேர்தல்.. ரொம்பவே எதிர்பார்த்த தேவகவுடா மருமகள்.. ஸ்ட்ரிக்ட்டாக மறுத்த குமாரசாமி! சீட் இல்லை
பெங்களூர்: கர்நாடகாவில் மாநிலத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும் நிலையில், 50 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை ஜேடிஎஸ் கட்சி வெளியிட்டுள்ளது. ஹாசன் தொகுதி யார் போட்டியிடுவார்கள் சஸ்பெண்சும் முடிவுக்கு வந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இப்போது பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கும் நிலையில், அங்கே மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அப்போது பதிவாகும் வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இதனிடையே கர்நாடகாவில் மாநிலத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும் நிலையில், 50 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை ஜேடிஎஸ் கட்சி வெளியிட்டுள்ளது. ஹாசன் தொகுதி யார் போட்டியிடுவார்கள் சஸ்பெண்சும் முடிவுக்கு வந்துள்ளது.

வேட்பாளர் பட்டியல்: ஹாசன் தொகுதியில் ஜேடி(எஸ்) கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி. தேவகவுடாவின் மருமகள் பவானி ரேவண்ணா உறுதியாக இருந்தார். இருப்பினும், அங்கே அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக எச்.பி.ஸ்வரூப் ஜேடிஎஸ் சார்பில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. முதலில் 49 பேரைக் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், அதைத் தொடர்ந்து மேலும் ஒரு வேட்பாளர் பெயர் வெளியிடப்பட்டது.
இப்படி மொத்தம் 50 பேரைக் கொண்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. அங்கே ஹாசன் தொகுதியில் யார் போட்டியிடுவார் என்பதில் தொடர்ந்து சஸ்பெண்ஸே நிலவி வந்தது. அங்கே போட்டியிட வேண்டும் என்பதில் பவானி ரேவண்ணா உறுதியாக இருந்தார். இருப்பினும், கடந்த காலங்களிலும் அவர் போட்டியிட வாய்ப்பில்லை என மறுத்த பவானி ரேவண்ணாவின் மைத்துனரும் ஜேடிஎஸ் தலைவருமான எச்.டி.குமாரசாமி, அந்த தொகுதியில் கட்சிக்காக உண்மையாக உழைத்தவர் நிறுத்தப்படுவார் என்றே கூறி வந்தார்.
ஹாசன் தொகுதி: இதற்கு முன்பு ஹாசன் ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினராக இருந்த பவானி ரேவண்ணா, குமாரசாமியின் மூத்த சகோதரர் எச் டி ரேவண்ணாவின் மனைவி ஆவார். அவருக்கு அவரது கணவர் ஏற்கனவே எம்எல்ஏவாக இருக்கிறார். அவரது ஒரு மகன் பிரஜ்வல் ரேவண்ணா, ஹாசனில் இருந்து எம்பியாகவும் மற்றொரு மகன் சூரஜ் ரேவண்ணா கர்நாடக மேல் சபை உறுப்பினராகவும் இருக்கிறார்.
இந்த சூழலில் தான் தனக்கும் போட்டியிட வாய்ப்பு வேண்டும் என்று பவானி ரேவண்ணா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தார். இருப்பினும், அவருக்கு வாய்ப்பு தராமல் எச்.பி.ஸ்வரூப்பிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஹாசன் வேட்பாளராக ஸ்வரூப்பை அறிவித்த ஜேடி(எஸ்) மாநிலத் தலைவர் சி.எம்.இப்ராகிம், ரேவண்ணா மற்றும் பவானியின் ஒப்புதலுடனும், தேவகவுடாவின் ஆசியுடனும் தான் வேட்பாளர் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
குடும்ப சண்டை: ஹாசன் தொகுதி குறித்து தேவ கவுடா குடும்பத்துக்குள் பிளவு ஏற்பட்டது. தனது சகோதரர் ரேவண்ணாவை மூளைச்சலவை செய்ய சில சகுனிகள் முயல்வதாகக் குமாரசாமி குற்றஞ்சாட்டியிருந்தார். வயது மூப்பு காரணமாக சில காலமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த தேவகவுடாவே இந்த பிரச்சினையைச் சரி செய்யத் தனது இரண்டு மகன்கள் மற்றும் பவானியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும், அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

அப்போது முதல் ஹாசன் தொகுதியில் தேவகவுடாவின் வார்த்தையே இறுதியானது என்று குமாரசாமி மற்றும் ரேவண்ணா இருவரும் தொடர்ந்து கூறி வந்தனர். இந்தச் சூழலில் தான் ஹாசன் வேட்பாளராக ஸ்வரூப் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் முக்கியம்: ஹாசன் மாவட்ட முன்னாள் துணைத் தலைவரும், மறைந்த முன்னாள் எம்எல்ஏ எச்எஸ் பிரகாஷின் மகன் தான் இப்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஹெச்பி ஸ்வரூப்.. ஹாசன் தேவகவுடாவின் சொந்த மாவட்டமாகும்.. கடந்த 2018 சட்டமன்றத் தேர்தலில் அங்கே இருக்கும் 8 தொகுதிகளில் 7இல் ஜேடிஎஸ் வென்றது.
ஹாசன் சட்டசபை தொகுதியில் மட்டும் பாஜகவின் பிரீதம் கவுடா வெற்றி பெற்றிருந்தார். ஹாசன் மாவட்டத்தில் பாஜக வெல்வது இதுவே முதல்முறை. இந்த அவர்கள் வெல்லக் கூடாது என்பதே ஜேடிஎஸின் குறியாக உள்ளது.












Click it and Unblock the Notifications