கர்நாடக அரசிலை தீர்மானிக்கும் ஜேடிஎஸ்! காரணம் சாதி வாக்கு? மீண்டும் கிங் மேக்கர்.. புது சர்வே
பெங்களூர்: கர்நாடகாவில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், இன்று புதியதொரு கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் கர்நாடக அரசிலையைத் தீர்மானிக்கும் சக்தி ஜேடிஎஸ் கட்சிக்குச் செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இப்போது பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அங்கே இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தீவிரமா செய்து வருகிறது.

ஏற்கனவே அங்கே பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துத் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. தேர்தல் நெருங்க நெருங்க அங்கே சூறாவளி பிரசாரம் நிச்சயம் இருக்கும்.
கர்நாடகா: கர்நாடக தேர்தல் என்பது பாஜகவுக்கு ரொம்பவே முக்கியம்.. தென் மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா தான். இதனால் அங்கே எப்படியாவது ஆட்சியைத் தக்க வைக்கவே பாஜக முயல்கிறது. ஊழல் புகார்கள் தொடங்கி பல்வேறு காரணங்களால் பசவராஜ் பொம்மை அரசு மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தேசிய தலைமையை வைத்து ஆட்சியைத் தக்க வைக்க பாஜக முயல்கிறது.

அதேநேரம் இந்த அதிருப்தியை வாக்குகளாக மாற்றி கர்நாடக தேர்தலை வெல்லக் காங்கிரஸும் முயல்கிறது. அங்கே சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோர் தலைமையில் இயங்கும் காங்கிரஸ் தொடர்ச்சியாக மாநில பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்தே வருகிறது. கடந்த தேர்தலிலே பாஜகவுக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் இந்தத் தேர்தலில் எப்படியாவது பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று முயன்று வருகிறது.
பெரும்பான்மை இல்லை: இதனிடையே ஜன் கி பாத் என்ற அமைப்பு நடத்திய சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் 224 தொகுதிகள் இருக்கும் நிலையில், அங்கே பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை. இதனிடையே இப்போது ஜன் கி பாத் நடத்திய கருத்துக்கணிப்பில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் 94 இடங்களிலும் பாஜக 93 இடங்களிலும் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

இரு கட்சிகளுக்கும் இடையே எந்தவொரு பெரிய இடைவெளியும் இல்லை. அதேபோல பிராந்திய கட்சியான ஜேடிஎஸ் 25-29 இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. பிராந்தியம் வாரியாக பார்க்கும் போது, பெங்களூரில் ஜேடிஎஸ் 3 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளது. மத்திய கர்நாடகா மற்றும் கல்யாண் கர்நாடகாவில் தலா ஒரு இடத்திலும் வெல்ல வாய்ப்புள்ளது. கிட்டூர் கர்நாடகா மற்றும் கோஸ்டர் கர்நாடகா பிராந்தியங்களில் ஒரு இடத்திலும் வெல்ல வாய்ப்பே இல்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஓல்ட் மைசூர்: அதேநேரம் ஓல்ட் மைசூர் பகுதி தான் ஜேடிஎஸ் கட்சிக்கு கேம் சேஞ்ராக உள்ளது. பழைய மைசூரில் 57 இடங்கள் இருக்கும் ஜேடிஎஸ் 22 இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. அங்கே காங்கிரஸ் 23 இடங்களில் வெல்லும் என்றும் இப்போது ஆட்சியில் இருக்கும் பாஜக 12 வெறும் இடங்களில் மட்டுமே வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. இது ஜேடிஎஸ் கட்சிக்கு பெரியதொரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது.
ஓல்ட் மைசூர் என்பது மண்டியா, ராம் நகர், பெங்களூர் ஊரகம், மைசூர் ஆகிய இடங்களை உள்ளடக்கியது. இங்கே வொக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவர்களே அதிகம். வொக்கலிகா சமூகத்தினர் எப்போதும் ஜேடிஎஸ் கட்சிக்கே ஆதரவாக வாக்களிப்பார்கள். இதன் காரணமாகவே மற்ற இடங்களில் போட்டியில் இல்லாத ஜேடிஎஸ், இங்கு கடும் போட்டியைத் தந்து 22 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

கிங் மேக்கர்: கடந்த 2018 கர்நாடக சட்டசபைத் தேர்தலிலேயே யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.. பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 80 இடங்களிலும் வென்றிருந்தது. 37 இடங்களில் வென்றிருந்த ஜேடிஎஸ் கிங் மேக்கராக மாறியது. அப்போது அவர்கள் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியை அமைத்தனர். இருப்பினும், அது சில மாதங்களிலேயே கவிழ்ந்தது.
இந்தத் தேர்தலிலும் அதேபோல ஜேடிஎஸ் கிங் மேக்கராக உருவாகும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த முறையும் கிங் ஆக மாற முயலுமா அல்லது கிங் மேக்கராகவே இருக்கும் என்பது கொஞ்சக் காலத்தில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications