கமல் - காங்கிரஸை விடுங்க.. இந்த நெருக்கத்தை கவனிச்சீங்களா? அன்று கண்காட்சி.. இன்று தனியாக மீட்டிங்!
பெங்களூர் : கர்நாடகா முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை தனியே சந்தித்து உரையாடியுள்ளார். திமுகவுடன் கமல்ஹாசன் நெருங்கி வருவது அரசியல் அரங்கில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
அண்மைக்காலமாகவே மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சியுடன் மிகுந்த நெருக்கம் காட்டி வருகிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி நடத்திய இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் பங்கேற்று, டெல்லியில் ஒரே மேடையில் ராகுலுடன் உரையாற்றினார் கமல்ஹாசன். மேலும், சோனியா காந்தியையும் சந்தித்தார்.

அதோடு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து பிரச்சாரத்திலும் ஈடுபட்டார் கமல்ஹாசன். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன், கமல்ஹாசனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, கர்நாடகா தேர்தலிலும் தங்களுக்கு ஆதரவாக கமல்ஹாசனை பிரச்சாரம் செய்ய வருமாறு அழைத்தது காங்கிரஸ் கட்சி.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் அதிக இடங்களைக் கைப்பற்றிய நிலையில் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்தார் கமல்ஹாசன். கர்நாடக தேர்தல் வெற்றிக்கு மட்டுமல்ல, வெற்றி பெற்ற முறைக்கும் பாராட்டுகள் என கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வது, கருத்து தெரிவிப்பதன் மூலம் மக்கள் நீதி மய்யம் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா பதவி ஏற்பு விழா பெங்களூர் கண்டீரவா மைதானத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. பதவியேற்பு விழாவிற்கு கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
கமல்ஹாசன் இன்று பெங்களூர் சென்று பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். ஆனால், பல அரசியல் தலைவர்கள் கமல்ஹாசனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகிய இருவரும் கமலுக்கு சற்று தொலைவில் இருந்த படியே வணக்கம் செலுத்திவிட்டு சென்றனர். அருகில் வந்து கைகொடுக்கக் கூட இல்லை. இது அரசியல் பார்வையாளர்களால் கவனிக்கப்பட்டது.

ஆனால், முதல்வர் ஸ்டாலினுடன் தனியாக சிறிது நேரம் பேசியுள்ளார் கமல்ஹாசன். அண்மையில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்திருந்தார் கமல்ஹாசன். இந்நிலையில், இன்று பெங்களூரில் பதவியேற்பு நிகழ்விற்கு முதல்வர் ஸ்டாலினும், கமல்ஹாசனும் சென்றிருந்த நிலையில், இருவரும் தனியாக அமர்ந்து சிறிது நேரம் பேசியுள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் காங்கிரஸ் மற்றும் திமுகவோடு நெருக்கம் காட்டி வருவதால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டனியில் மநீம இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024 மக்களவை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இடம்பிடித்து எப்படியும் எம்.பி சீட் வாங்கிவிட வேண்டும் என்ற கணக்கில் இருப்பதாக தெரிகிறது.
இந்த கூட்டணிக்கு அச்சாரம் போடும் வகையிலேயே காங்கிரஸுடன் நெருக்கம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று ஸ்டாலினுக்கு அருகே அமர்ந்து கமல்ஹாசன் பேசியது தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை திமுக மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார் கமல்ஹாசன். பிரச்சாரங்களில் திமுகவையும் சாடியிருந்தார். ஆனால், அதன்பிறகு திமுகவுடன் நெருக்கத்தையே கடைபிடித்து வருகிறார். இப்போது கர்நாடகாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உடன் கமல்ஹாசனின் நெருக்கம் அதிகரித்திருப்பது வெளிப்படையாகவே கூட்டணிக்கான அஸ்திவாரம் தான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications