கர்நாடகாவில் பதற்றம்- பிரதமர் மோடியை வரவேற்கும் பேனர்களில் இந்தி எழுத்துகள் தார்பூசி அழிப்பு!
பெங்களூர்: கர்நாடகாவில் இன்றும் நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்களில் இந்தி எழுத்துகளை கன்னட அமைப்பினர் தார்பூசி அழித்ததால் பதற்றம் நிலவுகிறது. மேலும் பிரதமர் மோடியை வரவேற்று வைக்கப்பட்ட இந்தி பேனர்களும் கன்னட அமைப்பினரால் அகற்றப்பட்டன.
Recommended Video
பிரதமர் மோடி கர்நாடகா மாநிலத்தில் இன்றும் நாளையும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். பெங்களூருவில் ரூ.27000 கோடி மதிப்பிலான பல ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் அடிக்கல் நாட்டி தொடங்கிவைக்கிறார். பெங்களூரு புறநகர் ரயில் திட்டம், பெங்களூரு கண்டோன்மென்ட் யஷ்வந்த்பூர் சந்திப்பு ரயில் நிலைய மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.இந்தியாவின் முதல் குளிரூட்டப்பட்ட ரயில் நிலையம், கொங்கன் ரயில் பாதையை 100 சதவீதம் மின்மயமாக்குதல் மற்றும் பிற ரயில்வே திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
பெங்களூருவில் மூளை ஆராய்ச்சி மையத்தைத் திறந்து வைக்கும் பிரதமர் மோடி, ஐஐஎஸ்சி-யில் பாக்சி பார்த்தசாரதி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். டாக்டர் பி ஆர் அம்பேத்கர் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் (பேஸ்) பல்கலைக்கழக புதிய வளாகத்தை பெங்களூருவில் பிரதமர் திறந்து வைக்கிறார். சுமார் ரூ.4600 கோடி செலவில் உருவாக்கப்பட்ட 150 'தொழில்நுட்ப மையங்களை' பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

மைசூருவில் உள்ள நாகனஹள்ளி ரயில் நிலையத்தில் புறநகர்ப் போக்குவரத்திற்கான கோச்சிங் முனையத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்
மைசூருவில் உள்ள ஏஐஐஎஸ்எச் 'தொடர்பு குறைபாடுள்ள நபர்களுக்கான சிறப்பு மையம்' நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும். 8வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, மைசூருவில் உள்ள மைசூர் அரண்மனை மைதானத்தில் நடைபெறும் மக்கள் பங்கேற்கும் யோகா கண்காட்சியில் பிரதமர் பங்கேற்கிறார்.
மைசூரில் பிரதமரின் யோகா நிகழ்ச்சியுடன், 75 மத்திய அமைச்சர்கள், நாடு முழுவதும் 75 முக்கிய இடங்களில் நடைபெறும் யோகா நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடியை வரவேற்று பெங்களூரு, மைசூரு நகரங்களில் இந்தியில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. கர்நாடகாவில் இந்தி எதற்கு? என்ற முழக்கத்துடன் கன்னட ரக்ஷன வேதிக உள்ளிட்ட கன்னட அமைப்பினர் பிரதமர் மோடியை வரவேற்கும் பேனர்களில் இருந்த இந்தி எழுத்துகளை தார்பூசி அழித்தனர். பல இடங்களில் பிரதமர் மோடியை வரவேற்கும் இந்தி பேனர்கள் அகற்றப்பட்டன.
500க்கும் மேற்பட்ட கன்னட அமைப்பினர், பெங்களூருவில் ஆர்.ஆர்.நகர், விஜயநகர், மைசூரு சாலையில் பிரதமர் மோடியின் பேனர்களில் இருந்த இந்தி எழுத்துகளை அழித்தனர். அப்போது, பெங்களூருவில் இந்தி பதாகைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என அவர்கள் முழக்கமிட்டனர். இதையடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications