கிரிக்கெட் டீமை பாருங்க.. எல்லாமே உயர் ஜாதியா இருக்காங்க.. கொடுங்க இட ஒதுக்கீடு.. நடிகர் சேத்தன் நச்
பெங்களூர்: இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்விலும் இடஒதுக்கீடு அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்று கன்னட நடிகர் சேத்தன் குமார் வலியுறுத்தி உள்ளார்.
நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகளாகியும் இந்திய கிரிக்கெட் அணியில் முற்படுத்தப்பட்ட வகுப்பினர் எனப்படுகிற உயர்ஜாதியினர் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. பிற சமூகத்தை சேர்ந்தவர்கள் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக் கூடியதாகவும் இருக்கிறது.
ஆனால் இந்திய கிரிக்கெட் அணியில் முற்படுத்தப்பட்ட வகுப்பினர் வெளிப்படுத்தும் திறமைகளை விட இதர சமூகத்தினரே திறமையான ஆட்டங்களை வெளிப்படுத்தியும் வருகின்றனர். இதனால் விளையாட்டு வீரர் தேர்வுகளிலும் இடஒதுக்கீடு தேவை என்பது நீண்டகால குரல்.
என்னமோ நடக்குது..மர்மமா இருக்குது! அவசரமாய் டெல்லிக்கு பறக்கும் ஓபிஎஸ்! ஸ்கெட்ச் போடும் ’வாரிசு’!

உயர்ஜாதி ஆதிக்கம்
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வில் இடஒதுக்கீடு தேவை என்பதை வலியுறுத்தி கன்னட நடிகர் சேத்தன்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை விவரம்: இந்திய கிரிக்கெட் அணியில் 70% பேர் உயர் வகுப்பினர் அல்லது முற்படுத்தப்பட்ட வகுப்பினர். கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு உள்ளது. அதே நடைமுறையை கிரிக்கெட்டிலும் செயல்படுத்த வேண்டியது அவசியம்.

தென்னாப்பிரிக்கா இடஒதுக்கீடு
தென்னாப்பிரிக்கா அணியில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் வெள்ளை இனத்தவர் அல்லாதவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சேர்க்க வேண்டும் என்கிற நடைமுறை உள்ளது. 2016-ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் இப்படியான ஒரு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. உதாரணமாக 6 பேர் வெள்ளை இனத்தவர் அல்லாதவராக தேர்வு செய்யப்பட்டால் அவர்களில் 2 பேர் கறுப்பினத்தவராக இருக்க வேண்டும் என்கிறது தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் நடைமுறை.

எஸ்சி, எஸ்டி வீரர்கள்
அதேபோல ஒடுக்கப்பட்ட, பழங்குடி சமூகத்தில் இருந்து கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்வதும் அவசியம். அவர்கள் மிக திறமையான ஆட்டங்களை வெளிப்படுத்துவார்கள். கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்கிற தேர்வு குழுவிலும் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு கன்னட நடிகர் சேத்தன்குமார் கூறியுள்ளார்.

பெருமிதம் தந்த நடராஜன்
தமிழகத்தில் இந்த கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகும் கிரிக்கெட் வீரர்களில் பெரும்பாலானோர் உயர்ஜாதி வகுப்பினர்தான். அவர்களைத் தாண்டி பிற சமூகத்தினர் இந்திய அணிக்கு தேர்வானாலும் அவர்களுக்கான ஊடக வெளிச்சங்களும் மிக சொற்பம்தான். இந்திய கிரிக்கெட் அணியில் தமிழ்நாட்டின் சின்னப்பம்பட்டி நடராஜன் இணைந்து அசாத்திய திறமைகளை காட்டிய போது ஒட்டுமொத்த தமிழகமே பெருமிதம் கொண்டது.

நடராஜன்கள் வெயிட்டிங்
சின்னப்பம்பட்டி நடராஜன்கள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குக்கிராமத்திலும் இருக்கின்றனர்.. ஒவ்வொரு மலை கிராமத்திலும் இருக்கின்றனர். தமிழ்நாட்டு ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி சமூக மக்களுக்கு கிரிக்கெட் கோச்சிங் போன்றவை பொருளாதார சுமை கொண்டவை. அதனால் அவர்களுக்கு எட்டாக்கனியாக இருக்கிறது. இருந்தபோதும் இடஒதுக்கீடு எனும் வாய்ப்பு கிடைத்தால் தடை உடைத்து சாதித்த நடராஜன்கள் ஏராளமானோர் தமிழ் மண்ணில் இருந்து அணிவகுப்பார்கள் என்பது நிச்சயமான ஒன்றுதான் என்கின்றனர் சமூகவியலாளர்கள்.