கன்னடர்களும் தமிழர்களும் "திராவிடர்கள்".. இப்படி பேசியிருப்பது பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா!
பெங்களூர்: கன்னடர்களும் தமிழர்களும் 'திராவிடர்கள்'; கன்னடர்- தமிழர் இடையே எந்த ஒரு வேறுபாடுமே இல்லை என கர்நாடகா மாநில முன்னாள் முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார். பெங்களூரில் நடைபெற்ற கன்னடர்- தமிழர் ஒற்றுமை கலாசார மாநாட்டில் பேசிய எடியூரப்பா, தமது ஆட்சிக் காலத்தில் பெங்களூர் அல்சூர் ஏரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
பெங்களூரில் பல்வேறு கன்னட, தமிழர் அமைப்புகள் இணைந்து பங்கேற்ற கன்னடர்- தமிழர் ஒற்றுமை கலாசார மாநாடு நேற்று நடைபெற்றது. பெங்களூர் அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு கர்நாடகா தாய்மொழிக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்டி குமார் தலைமை வகித்தார். பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் தாமோதரன், கர்நாடகா தமிழ்ப் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் தனஞ்செயன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இந்த மாநாட்டை கர்நாடகா முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய எடியூரப்பா, கன்னடர்களும், தமிழர்களும் திராவிடர்கள். கன்னடர், தமிழரிடையே எந்த வேறுபாடும் இல்லை. கன்னடரும் தமிழரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்.
என்னுடைய ஆட்சிக் காலத்தில் கன்னடர்- தமிழர் ஒற்றுமையாக இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. என் ஆட்சியில்தான் பெங்களூர் அல்சூர் ஏரிக்கு அருகே திருவள்ளுவர்சிலை அமைக்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வராக இருந்த கருணாநிதியை நேரில் சந்தித்து கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலையை சென்னையில் திறக்க வேண்டும் என வலியுறுத்தினேன். இதனையடுத்தே சென்னையில் சர்வக்ஞர் சிலை திறக்கப்பட்டது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் இந்தியாவின் சிறப்பு. முதல்வராக பதவி வகித்த காலத்தில் தமிழர் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி இருந்தேன். கர்நாடகா மாநில வளர்ச்சிக்காக தமிழர்கள் பாடுபடுகின்றனர். இந்த ஒற்றுமை தொடர வேண்டும் என்றார்.

இந்த மாநாட்டில் கர்நாடகா முதல்வரின் சட்ட ஆலோசகர் பொன்னண்ணா, ராஜ்யசபா முன்னாள் எம்பி ஹனுமந்தையா, கன்னட ரக்ஷன வேதிகே தலைவர் நாராயண கவுடா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் வெளிமாநில தமிழர்களுக்கு கல்வி-வேலை வாய்ப்பில் 5 % இட ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திராவிடத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார். சென்னையில் பிரசார் பாரதி அலுவலகத்தில் இந்தி மாத நிறைவு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலில் தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற வரி தவிர்க்கப்பட்டது சர்ச்சையானது. மேலும், இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிப்பதற்கு கடந்த 50 ஆண்டுகளில் பல்வேறு முயற்சிகள் நடைபெற்றன. இந்த பிரித்தாளும் கொள்கை வெற்றி பெற்றது கிடையாது எனவும் ஆளுநர் ரவி பேசியிருந்தார். இதனால் ஆளுநர் ரவி, திராவிட ஒவ்வாமையை கடைபிடிக்கிறார் என்கிற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. தற்போது கர்நாடகா மாநில பாஜக மூத்த தலைவர் எடியூரப்பாவே, கன்னடர்களும் தமிழர்களும் மரபினத்தால் திராவிடர்கள் என பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications