தள்ளுமுள்ளுவில் ஏழு பவுன் தங்க தாலி செயின் பறிபோனது... கண்ணீர் விட்டு அழுத பெண் சப் இன்ஸ்பெக்டர்
பெங்களூர்: மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் காந்தியின் பெயரை மாற்றியதை கண்டித்தும், நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றம்சாட்டப்படுவதை கண்டித்தும் கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. அங்குள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், பாதுகாப்பு பணிக்குச் சென்ற பெண் போலீஸ் அதிகாரி 7.5 பவுன் தங்க தாலி சங்கிலியை பறிகொடுத்தார்.
மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் காந்தியின் பெயரை மாற்றியதற்கு காங்கிரஸ் கட்சி கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. அத்துடன் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றம்சாட்டப்படுவதை கண்டித்தும் காங்கிரஸ் பாஜகவிற்கு எதிராக போராடி வருகிறது. நேற்று கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சார்பில் பா.ஜனதா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த காங்கிரஸ் நிர்வாகிகள் முடிவு செய்தனர். இதன்படி காங்கிரஸ் கட்சியினர் ஜெயில் சர்க்கிளில் ஒன்று கூடி பாஜகவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

பின்னர் காலை 11 மணி அளவில் அங்கிருந்து சிவமொக்காவில் உள்ள பாஜக அலுவலகம் நோக்கி காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக சென்றார்கள். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், காங்கிரஸ் கட்சியினரை தடுத்து நிறுத்தினார்கள்.
இந்த போராட்டத்தின் போது பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டா் அம்ருதாவும் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினார். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் யாரோ மர்மநபர், பெண் போலீஸ் அதிகாரி அம்ருதா கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் தாலி சங்கிலியை பறித்துவிட்டு தப்பி சென்றுவிட்டார்கள். அந்த தாலி சங்கிலியின் மதிப்பு ரூ.7 லட்சத்திற்கு மேல் ஆகும்
போராட்டம் முடிந்த பிறகு கழுத்தை பார்த்தபோது தனது தாலி சங்கிலி மாயமாகி இருந்ததை அறிந்து அம்ருதா அதிர்ச்சி அடைந்தார். அப்போது தான் யாரோ மர்மநபர்கள் தள்ளுமுள்ளுவை பயன்படுத்திக் கொண்டு கழுத்தில் கிடந்த தங்க தாலி சங்கிலியை பறித்து சென்றதை கண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார். சமீபத்தில் தான் அந்த தாலி சங்கிலியை அம்ருதா வாங்கியிருந்துள்ளார்.
இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் தனது உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார், தள்ளுமுள்ளு நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். இதுதொடர்பாக சிவமொக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. போராட்டத்தில் பெண் போலீஸ் அதிகாரியின் தங்க தாலி சங்கிலி திருட்டு போன சம்பவம் கர்நாடாகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications