கர்நாடகா: பாஜக வேட்பாளர் பட்டியலால் பிரளயம்-. ஜெயநகர் தொகுதியில் 1,200 பேர் கூண்டோடு விலகல்!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் அக்கட்சியில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஜெயநகர் தொகுதியை என்.ஆர். ரமேஷுக்கு ஒதுக்காததைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் 1,200 பேர் பாஜகவில் இருந்து கூண்டோடு விலகுவதாக அறிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 10-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்க உள்ளது.

கர்நாடக தேர்தலுக்கான வேட்பாளர்களை ஜேடிஎஸ், காங்கிரஸ் கட்சிகள் ஏற்கனவே அறிவித்தன. இரு கட்சிகளிலும் வேட்பாளர்கள் பட்டியலை முன்வைத்து மிகப் பெரிய சலசலப்பு ஏற்படவில்லை. ஜேடிஎஸ் கட்சியில் ஹாசன் தொகுதியில் தமக்குதான் சீட் வேண்டும் என்று கேட்கிறார் தேவ கவுடா மருமகள் பவானி. ஆனால் குமாரசாமியோ இதனை ஏற்க மறுக்கிறார். இந்த விவகாரம் வரும் நாட்களில் விஸ்வரூபம் எடுக்கும்.
காங்கிரஸ் கட்சியில் 11 முஸ்லிம் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். ஆனால் 25 முதல் 30 முஸ்லிம் வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்திருக்க வேண்டும் என்ற அதிருப்தி குரல் எழுந்தது. அதேபோல தேர்தலில் தமக்கு போட்டியிட சீட் தராத காரணத்தால் மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான ககோடு திம்மப்பா மகள் ராஜநந்தினி இன்று எடியூரப்பாவை சந்தித்து பாஜகவில் இணைந்தார்.
பாஜகவைப் பொறுத்தவரையில் முதல் கட்டமாக நேற்று 189 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. இந்த வேட்பாளர் பட்டியலில் தங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்பதால் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா போர்க்கொடி தூக்கினர். இதில் ஜெகதீஷ் ஷெட்டர் தாம் தேர்தலில் போட்டியிடுதான் தீருவேன் என அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார். இதற்காக டெல்லிக்கும் சென்றுள்ளார். ஆனால் ஈஸ்வரப்பாவோ, ஒட்டுமொத்த தேர்தல் அரசியலுக்கே முழுக்குப் போடுவதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்று முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது முதலே சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பலரது ஆதரவாளர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய நிலையில் 10க்கும் மேற்பட்ட சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி ஆதரவாளர்களை போராட வைத்துள்ளனர். மற்றொரு முன்னாள் துணை முதல்வர் லட்சுமண் சவதி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதேபோல பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் என்.ஆர்.ரமேஷுக்கு சீட் தராததைக் கண்டித்து அங்கும் போராட்டம் வெடித்தது. என்.ஆர். ரமேஷ் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளனர். என்.ஆர். ரமேஷுக்கு கட்சி மேலிடம் வாய்ப்பு தராததைக் கண்டித்து 1,200 பேர் பாஜகவில் இருந்து கூண்டோடு விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இதேபோல ஈஸ்வரப்பா ஆதரவாளர்களான ஷிவமோகா மேயர் உள்ளிட்ட 19 பேர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காததால் பாஜக எம்.எல்.சி சங்கர் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications