'ஐந்து தல ராவணன்'... கர்நாடகாவில் காங்கிரஸை அரியணையில் ஏற்ற போராடிய அந்த 5 'தலைகள்'!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்பது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள். காங்கிரஸ்- ஜேடிஎஸ் இணைந்து மீண்டும் கூட்டணி ஆட்சி அமைக்கக் கூடிய சாத்தியங்கள் அதிகம் இருக்கின்றன என்பது களநிலவரம்.
தென்னிந்தியாவில் பாஜக கால் பதித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய மாநிலம் ஒன்றே ஒன்று.. கர்நாடகாதான். 2018-ம் ஆண்டு தேர்தலில் அதிக இடங்களை பாஜக கைப்பற்றிய போதும் காங்கிரஸ்- ஜேடிஎஸ் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால் பாஜக விடாமல் ஆட்சியை கவிழ்த்து அரியணை ஏறியது.

தற்போதைய தேர்தலில் காங்கிரஸ், பிற மாநிலங்களைப் போல சுணங்கி கிடக்காமல் விஸ்வரூபம் காட்டி பிரசாரம் செய்தது. தொடக்க முதல் வாக்குப் பதிவு நாள் வரையில் காங்கிரஸ் காட்டிய அதிரடி பாஜகவை நிலைகுலைய வைத்தது என்பது மிகையல்ல. காங்கிரஸின் இத்தகைய அதிரடி பிரசாராத்தை எதிர்கொள்ளத்தான் பிரதமர் மோடியே 16 பொதுக்கூட்டங்களில் பங்கேற்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு இத்தகைய அசுர பலத்தை தேர்தல் களத்தில் உருவாக்கியவர்கள் 5 முகங்கள் என்கின்றனர்.
3 ஆண்டுகளுக்கு முன் கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டிக்கான மேலிட பொறுப்பாளராக ரந்தீப் சிங் சுர்ஜிவாலா நியமிக்கப்பட்டார். அதுவரை கேசி வேணுகோபால், மேலிடப் பொறுப்பாளராக இருந்தார். சுர்ஜிவாலா உள்ளே நுழைகிற போது காங்கிரஸின் இரு பெரும் தலைகளான சித்தராமையாவும் டிகேசிவகுமாரும் எலியும் பூனையுமாக ஆளுக்கு ஒரு திசையில் திரும்பிக் கொண்டிருந்தனர். சுர்ஜிவாலாதான் இந்த இரு கோஷ்டிகளையும் தொடர்ந்து இணக்கமாக இருக்க வைத்து அக்கப்போர்கள் வெளியே வரவிடாமல் அடக்கி வாசிக்க வைத்து காங்கிரஸ் கட்சிக்கே உரித்தான கோஷ்டி பூசலை மட்டுப்படுத்தினார். ராகுல் காந்தியின் யாத்திரையின் போதும் வேட்பாளர்கள் தேர்வின் போதும் இரு தலைகளும் முட்டி மோதாமல் இருக்க லாவகமான வியூகங்களை நடைமுறைப்படுத்தி அசத்திவிட்டார் சுர்ஜிவாலா என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.

இந்த வரிசையில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய காங்கிரஸ் தலைவர் எம்பி பாட்டீல். பவர்புல் லிங்காயத் தலைவரான எம்பி பாட்டீலை காங்கிரஸ் மேலிடம் மலைபோல நம்பியது. ஏனெனில் லிங்காயத்துகள் பொதுவாக பாஜகவின் வாக்கு வங்கி. இதனை உடைக்க வேண்டிய பெரும் பொறுப்பு எம்பி பாட்டீல் வசம் கொடுக்கப்பட்டது. இதனை செம்மையாக செய்தவர் எம்பி பாட்டீல். லிங்காயத்துகளில் பெரும் தலைவர்களில் ஒருவரான ஜெகதீஷ் ஷெட்டரை காங்கிரஸுக்கு கொண்டு வந்ததில் எம்பி பாட்டீல்தான் முதன்மையானவர். வீரசைவ லிங்காயத்துகள் காங்கிரஸையே ஆதரிப்போம் என அறிவித்து பாஜகவை நடுநடுங்க வைத்ததும் எம்பி பாட்டீல்தான். லிங்காயத்து பெல்ட்டுகளில் காங்கிரஸ் இம்முறை கணிசமான இடங்களை அள்ளும் என்பதை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளிப்படுத்துகின்றன. இதன் பின்னணியில் இருந்தவர் எம்பி பாட்டீல்தான்.
அத்துடன் நிற்காமல் சோனியா, பிரியங்கா, ராகுல் பிரசாரங்களுக்கு பொறுப்பெடுத்து மக்களை ஈர்க்கும் வகையிலான செயல்பாடுகளுக்கு காரணமாக இருந்தவரும் எம்பி பாட்டீல்தான்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மிக முக்கியமான இடத்தைப் பெற்றது. கர்நாடகா தேர்தல் நாயகனாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உருவெடுத்தது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற இலவசங்கள் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது எனவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் பஜ்ரங் தள் அமைப்புக்கு தடை போன்ற காத்திரமான முடிவுகள் சற்று பின்னடைவை காங்கிரஸுக்கு தந்துவிட்டது என்கிற கருத்தும் உண்டு. இத்தனைக்கும் காரணமே மூத்த காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வர்தான். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குழு தலைவராக செயல்பட்டவர் ஜி பரமேஸ்வர். காங்கிரஸ் ஆட்சியில் துணை முதல்வராக இருந்தவர் பரமேஸ்வர்.

இந்த பெரும் தலைகளுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் சசிகாந்த் செந்தில். 2008-ம் ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரி. 2019-ம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் இணைந்தார். தேர்தலை சந்தித்த கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் வார் ரூம் பொறுப்பாளராக செயல்பட்டார் சசிகாந்த் செந்தில். தேர்தல் பிரசாரம், களநிலவரம் தொடர்பான கருத்து கணிப்புகள், வேட்பாளர்களை சர்ச்சையின்றி தேர்வு செய்தல் ஆகியவற்றில் மிக முக்கியப் பங்களிப்பு செய்தவர் சசிகாந்த் செந்தில். அவருடன் கை கோர்த்தவர் கனுகோலு. பாஜக, ஜேடிஎஸ் கட்சிகளுக்கு எதிரான தேர்தல் பிரசாரம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் வியூகம் வகுத்தவர் கனுகோலு. பிரதமர் மோடியின் பிரசார வியூக குழுவில் இருந்தவர். அவரைத்தான் காங்கிரஸ் வளைத்துப் போட்டது. பிரசாந்த் கிஷோருடன் இணைந்து கனுகோலு பணியாற்றிய அனுபவத்தை காங்கிரஸுக்கு கொடுத்தார் கனுகோலு.












Click it and Unblock the Notifications