பாஜக வைத்த ‛செக்’.. 2வது தொகுதி ஒதுக்கும்படி பிடிவாதம் பிடிக்கும் சித்தராமையா! விழிக்கும் காங்.,
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வரான சித்தராமையா வருணா தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அவர் கோலார் தொகுதியில் களமிறங்க திட்டமிட்டு காய்நகர்த்தி வருகிறார். இதற்கிடையே தான் வருணா தொகுதியில் ட்விட்ஸ்ட்டாக பாஜக அமைச்சர் வி சோமண்ணாவை அக்கட்சி களமிறக்கி உள்ளது. இதனால் கடும் போட்டி உருவாகும் நிலையில் 2 தொகுதி கட்டாயம் வேண்டும் என சித்தராமையா பிடிவாதம் பிடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிக்கும் ஒரே கட்டமாக மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் சார்பில் 2 கட்டங்களாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 166 தொகுதிகளுக்கு வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் முன்னாள் முதல்வரான சித்தராமையாவுக்கு வருணா தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர் கோலார் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சி தலைவர்களின் கோஷ்டி பூசல்களால் கோலார் தொகுதியை வழங்க மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி விரும்பவில்லை. இதனால் அவருக்கு வருணா தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வருணா தொகுதி என்பது சித்தராமையாவின் சொந்த தொகுதியாகும். இங்கு 2008, 2013, 2018 என 3 முறை தேர்தல் நடந்துள்ளது. இதில் 2008, 2013ல் சித்தராமையா வெற்றி பெற்ற நிலையில் கடந்த ஆண்டு இந்த தொகுதியை மகன் யதீந்திராவுக்கு விட்டு கொடுத்தார். இதில் யதீந்திராவும் வெற்றி பெற்ற நிலையில் சித்தராமையா மைசூர் மாவட்டம் சாமுண்டீஸ்வரி, பாகல்கோட்டை மாவட்டம் பாதாமியில் போட்டியிட்டார். இதில் பாதாமியில் வெற்றி பெற்றார்.
கர்நாடகாவை பொறுத்தமட்டில் சித்தராமையா காங்கிரஸ் கட்சியின் முகமாக உள்ளார். இதனால் அவரை வீழ்த்த பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் வியூகங்கள் வகுத்து வருகின்றன. இதனால் கடந்த முறையை போல் 2 தொகுதியை சித்தராமையா கேட்டார். தற்போத வுருணா தொகதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் பாஜக சார்பில் அமைச்சர் சோமண்ணாவை அக்கட்சி களமிறக்கி உள்ளது. வருணா தொகுதியில் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த 55 ஆயிரம் வாக்குகள் உள்ள நிலையில் அந்த சமுதாயத்தை சேர்ந்த சோமண்ணாவை பாஜக வேட்பாளராக்கி உள்ளது.

இதனால் வருணாவில் சித்தராமையா எளிதாக வெற்றி பெறுவார் என கூறப்பட்ட நிலையில் சோமண்ணாவால் போட்டி கடுமையாக இருக்கும் என்ற கருத்து எழ தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் சித்தராமையா தற்போது கட்சி மேலிடத்திடம் தனக்கு கோலார் தொகுதியும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.
இதனால் அவர் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதனால் தான் அவர் தனது பாதுகாப்புக்காக 2 தொகுதிகளை கேட்கிறார். மேலும் காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போது 166 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவித்து இருந்தாலும் கோலார் தொகுதி நிலுவையில் உள்ளது. அந்த தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இதனால் அது சித்தராமையாவுக்கு ஒதுக்கீடு செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் முடிவு அறிய நாம் அடுத்தக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டியது அவசியமாகும். இதற்கிடையே கர்நாடகாவில் இன்று முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்கி உள்ளது. இதனால் விரைவில் காங்கிரஸ் கட்சி மீதமுள்ள 58 சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications