தொகுதி மாறியும் தோல்வி பயமா? கர்நாடகாவில் 2 தொகுதிகளில் களமிறங்கும் சித்தராமையா? உண்மை இதுதான்!
பெங்களூர்: கர்நாடகா முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் சித்தராமையா. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ள தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றால் முதல்வராகும் வாய்ப்பு சித்தராமையாவுக்கு உள்ளது. இந்நிலையில் தான் வரும் தேர்தலில் ஏற்கனவே வென்ற பாதாமி தொகுதியை விட்டுவிட்டு கோலார் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இங்கு அவர் வெற்றி பெறுவது எளிமையானது இல்லை என கூறப்படும் நிலையில் கடந்த தேர்தலைபோல் அவர் 2 தொகுதிகளில் போட்டியிடலாம் என கூறப்பட்ட நிலையில் தற்போது அதற்கு சித்தாராமையாவே பதில் அளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் ஒரு கட்சி 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
ஆட்சியை தக்க பாஜக வியூகம் வகுத்து செயல்பட்டு வரும் நிலையில் மீண்டும் வெற்றி பெற்று அதிகாரத்தை கைப்பற்ற காங்கிரஸ் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதுதவிர ஜனதாதளம்(எஸ்) மற்றும் ஆம்ஆத்மி கட்சிகள் கோதாவில் குதித்துள்ளன. இதனால் வரும் தேர்தலில் கர்நாடகாவில் நான்கு முனை போட்டி நிலவ உள்ளது.

சித்தராமையா தொகுதி மாற்றம்
தற்போது அனைத்து கட்சிகளும் வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் தான் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா தொகுதி மாறி வரும் சட்டசபை தேர்தலில் கோலார் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார். கடந்த தேர்தலில் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமியில் போட்டியிட்டு சித்தராமையா வெற்றி பெற்ற நிலையில் அவர் தற்போது தொகுதி மாறி கோலாரில் களமிறங்குவதாக அறிவித்துள்ளார். இதற்கு கட்சி மேலிடம் அனுமதி அளிக்கும் என கூப்படுவதால் ஏறக்குறைய சித்தராமையா அங்கு போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

2 தொகுதிகளில் போட்டியா?
இந்நிலையில் தான் கடந்த 2018 ம் ஆண்டு சட்டசபை தேர்தல் போல் சித்தராமையா இந்த முறையும் 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளார் என தகவல்கள் பரவின. 2018 ல் மைசூரு மாவட்டம் வருணா தொகுதியை தனது மகன் யதீந்திராவுக்கு விட்டு கொடுத்த சித்தராமையா மைசூரு மாவட்டம் சாமுண்டீஸ்வரி, பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதிகளில் களமிறங்கினார். இதில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வியடைந்த சித்தராமையா பாதாமியில் வெற்றி பெற்றார். அதேபோல் இந்த முறையும் சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டிடுவார் என சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. பாஜகவுக்கு சித்தராமையா தான் பதிலடி கொடுக்கிறார். இதனால் அவரை வீழ்த்த பாஜக நினைக்கும். மேலும் கோலார் மாவட்ட காங்கிரஸ் தலைவர்களிடம் ஒற்றுமை என்பது இல்லை. இது சித்தராமையாவுக்கு பாதகமாக அமையலாம். மேலும் காங்கிரஸ் சார்பில் முதல்வர் போட்டியில் சித்தராமையாவின் பெயர் உள்ளது. இதனால் அவர் 2 தொகுதிகளில் போட்டியிடுவது கட்டாயம் அவசியம் என பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சித்தராமையா விளக்கம்
இந்நிலையில் தான் சித்தராமையா இதற்கு விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் பாகல்கோட்டையில் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலில் நான் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட முடிவு செய்துள்ளேன். 2 தொகுதிகளில் போட்டியிடுவதாக நான் கூறவில்லை. கடந்த முறை பாதாமி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். நாடோடியாக நான் தொகுதியை தேடிக்கொண்டு அலைவதாக எதிர்க்கட்சியினர் சொல்கிறார்கள். சாமுண்டீஸ்வரி தொகுதியில் 8 முறை போட்டியிட்டேன். இந்த தொகுதி பிரிக்கப்பட்டபோது எனது சொந்த கிராமம் வருணா தொகுதியில் சேர்ந்தது. இதனால் வருணாவில் 2 முறை போட்டியிட்டேன்.

தொகுதி மாறியது ஏன்?
கடந்த முறை சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோற்ற நிலையில் பாதாமியில் வெற்றி பெற்றேன். பெங்களூரில் இருந்து பாதாமி அதிக தொலைவில் உள்ளதால் பெங்களூரை சுற்றியுள்ள ஏதாவது தொகுதியில் போட்டியிட விரும்பினேன். கோலாரில் போட்டியிடும்படி ஆதரவாளர்கள் கூறினார்கள். இதனால் அங்கு போட்டியிட விரும்புவதாக அறிவித்துள்ளேன். கட்சி மேலிடம் அனுமதி அளிக்கும் பட்சத்தில் நான் கோலாரில் போட்டியிட உள்ளேன். இந்த முறை காங்கிரஸ் கட்சி 150 தொகுதிகளில் வெற்றி பெறும். இல்லாவிட்டால் குறைந்தபட்சம் 130 இடங்களை கைப்பற்றுவோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications