மதகலவர டென்ஷன் ஏரியா.. கர்நாடகா கடலோர மாவட்டங்களில் யாருக்கு சான்ஸ்?கருத்து கணிப்பு நிலவரம் இதுதான்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் டிவி 9 கன்னடா மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பின் முடிவு தற்போது வெளியாகி உள்ளது. இதில் மதகலவரம் தொடர்பான டென்ஷன் அடிக்கடி உருவாகும் கடலோர கர்நாடக மாவட்டங்களில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளில் யாருக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:
கர்நாடக மாநிலத்துக்கு கடந்த 2018 ல் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் மே மாதம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் கர்நாடக மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் தேதியை கடந்த மாதம் இறுதியில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி மே மாதம் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு 2 நாட்கள் கழித்து மே மாதம் 13ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தி அன்றே முடிவுகள் வெளியாக உள்ளது. தற்போது மாநிலத்தில் வேட்புமனுத்தாக்கல் முடிந்து தொகுதி வாரியாக இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் தான் கர்நாடக தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அதன்படி இன்று டிவி 9 கன்னடா மற்றும் சி - வோட்டர் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. கர்நாடகாவில் மாவட்டங்கள் வாரியாக மொத்தம் 6 மண்டலங்கள் உள்ளன. இதில் மண்டல வாரியாக கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா ஆகிய 3 மாவட்டங்களை உள்ளடக்கிய பாஜகவின் கோட்டையாக கருதப்படும் கடலோர கர்நாடக மண்டலத்தில் எந்த கட்சி அதிக இடங்களை பெறும் என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. அதாவது இந்த 3 மாவட்டங்களிலும் மொத்தம் 21 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இதில் அதிக இடங்களை பாஜக கைப்பற்றும் என்றே கருத்து கணிப்பு தெரிவித்துள்ளன. அதன்படி இந்த மண்டலத்தில் பாஜகவுக்கு 50.30 சதவீத ஓட்டுகளும், காங்கிரஸ் கட்சிக்கு 35.4 சதவீத ஓட்டுகளும் கிடைக்கும் எனவும், ஜேடிஎஸ் கட்சிக்கு 8.3 சதவீதமும் மற்றவர்களுக்கு 6 சதவீதமும் ஓட்டு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஓட்டு சதவீதத்தின் அடிப்படையில் பார்த்தால் மொத்தமுள்ள 21 சட்டசபை தொகுதிகளில் பாஜக 16 முதல் 20 இடங்களில் வெற்றி பெறும் என டிவி 9 கன்னடா மற்றும் சி வோட்டர் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளார். மாறாக காங்கிரஸ் கட்சி 1 முதல் 5 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என கூறப்பட்டுள்ளது. மாறாக இந்த முறை ஜேடிஎஸ் கட்சிக்கு கடலோர கர்நாடக மண்டலத்தில் ஒரு தொகுதி கூட கிடைக்காது என கருத்து கணிப்பின் முடிவு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications