தமிழ்நாடு, மே. வங்கத்தை தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடகா சட்டசபையில் அதிரடி தீர்மானம்!
பெங்களூர்: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக கர்நாடகா சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கர்நாடகா அமைச்சர் எஸ்.பி. பாட்டீல் தாக்கல் செய்த இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு, மேற்கு வங்க மாநில சட்டசபைகளில் ஏற்கனவே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் கர்நாடகா மாநில அரசும் தற்போது நீட் எதிர்ப்பு தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றி இருக்கிறது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு என்பதே கிராமப்புற, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு எதிரானது; மாநில கல்வி முறையில் படிக்கும் மாணவர்கள் சிபிஎஸ்இ பாடத்தின் கீழ் தயாரிக்கப்படும் வினாத்தாளைக் கொண்ட நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது முடியாது; இதனால் ஒடுக்கப்பட்ட, கிராமப்புற மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவே பாழாகும் என்பதுதான் தமிழ்நாட்டின் தொடக்கம் முதலான எதிர்ப்பு நிலை. தமிழ்நாட்டில் அனிதா தொடங்கி ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வால் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டனர்.

நீட் எதிர்ப்பு தீர்மானம்: இதனால்தான் தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். தமிழ்நாடு சட்டசபையிலும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் மத்திய அரசு இன்னமும் இதனை கிடப்பில்தான் வைத்துள்ளது.
நாடு தழுவிய போராட்டம்: இந்த நிலையில் நடப்பாண்டு நீட் நுழைவுத் தேர்வில் ஏராளமான முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்தன. நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் ஒட்டுமொத்தமாக நாட்டையே பெரும் அதிர்ச்சி அடைய வைத்தன. இதனால் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
நீட் முறைகேடு கைதுகள்: மத்திய அரசும் நீட் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வு முகமை தலைவரை நீக்கியது. நீட் உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்க வல்லுநர் குழுவை அமைத்தது. இந்த நீட் முறைகேடு வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைத்தது. தற்போது வரை நீட் முறைகேடு வழக்குகளில் கைது நடவடிக்கைகள் தொடருகின்றன.
உச்சநீதிமன்றம்: உச்சநீதிமன்றத்திலும் நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டன. நீட் முறைகேடுகள் நடந்துள்ளதை உறுதி செய்த உச்சநீதிமன்றம், நாடு முழுவதும் முறைகேடுகள் நடந்ததற்கு ஆதாரம் இல்லை; அதனால் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டிருந்தது.
மத்திய அமைச்சருக்கு நெருக்கடி: இன்னொரு பக்கம், நீட் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. நாடாளுமன்றத்தில் தொடர்ந்து நீட் தேர்வு முறைகேடு விவகாரங்கள் எழுப்பப்படுகின்றன. 18-வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடரை நீட் முறைகேடுகளை விவாதிக்க வலியுறுத்தி இந்தியா கூட்டணி எம்பிக்கள் முடக்கினர்.
தமிழ்நாடு, மே.வங்கம் தீர்மானம்: இந்த நிலையில் நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரி தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநில சட்டசபையிலும் நீட் தேர்வுக்கு எதிராக நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கர்நாடகா தீர்மானம்: தமிழ்நாடு, மேற்கு வங்க மாநிலங்களைத் தொடர்ந்து கர்நாடகா மாநில சட்டசபையிலும் நீட் தேர்வுக்கு எதிராக இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கர்நாடகா மாநிலத்தில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் நடத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் எனவும் அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் மகாராஷ்டிரா மாநில அரசும் நீட் நுழைவுத் தேர்வை மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறது.












Click it and Unblock the Notifications