கொரோனா பிபிஇ கிட்டில் கோடிக் கணக்கில் ஊழல்.. கர்நாடகா பாஜகவுக்கு செக் வைத்த குன்ஹா ரிப்போர்ட்
பெங்களூர்: கர்நாடகாவில் கடந்த பாஜக ஆட்சியில் கொரோனா காலத்தில் நடந்த ஊழல் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சித்தராமையா முதல்வராக உள்ளார். சித்தராமையா முடா நிலம் முறைகேடு வழக்கு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்த விவகாரம் கர்நாடகா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறுபக்கம் பாஜக மீது காங்கிரஸ் அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக கர்நாடகா பாஜக குற்றம் சுமத்தி வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் கடந்த பாஜக ஆட்சியில், கொரோனா காலகட்டத்தில் நடந்த ஊழல் குறித்து, தற்போதைய காங்கிரஸ் அரசு வைத்துள்ள புகார் பகீர் கிளப்பியுள்ளது.
கொரோனா காலகட்டத்தில் உலகம் முழுவதுமே மாஸ்க், பிபிஇ கிட், சானிடைஸர் உள்ளிட்ட உபகரணங்களின் தேவை அதிகளவு இருந்தது. ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்தனர். அதில் ஊழல் நடந்ததாகவும் ஆங்காங்கே புகார் எழுந்தது.
தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்களை தொடர்ந்து தற்போது கர்நாடகாவிலும் கொரோனா ஊழல் புகார் தலை சுற்ற வைக்கிறது. இந்த புகார் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது
அந்த விசாரணைக் குழுவின் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இரண்டு சீனா நிறுவனங்களில் இருந்து சுமார் 3 லட்சம் பிபிஇ கிட்கள் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. டிஹெச்பி குளோபல் ஹாங்காங் மற்றும் பிக் பார்மாசிடிகல்ஸ் ஆ கிய நிறுவனங்களிடம் கடந்த 2020 ஏப்ரல் மாதம் பிபிஇ கொள்முதல் செய்யப்பட்டன.
மூன்று விதமான விலைகளில் சராசரியாக ஒரு பிபிஇ கிட் ரூ.2,000க்கு மேல் வாங்கியுள்ளனர். உலகம் முழுவதும் இருந்த அவசரநிலை மற்றும் பெருந்தொற்று காரணமாக டிஹெச்பி குளோபல் ஹாங்காங் நிறுவனத்திடம் நேரடி ஆர்டர் விடுக்கப்பட்டு, முதல்கட்டமாக கடந்த 2020 ஏப்ரல் மாதம் சுமார் 1 லட்சம் பிபிஇ கிட்கள் வாங்கப்பட்டன.
இதற்காக மாநில முதல்வர் எடியூரப்பா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஶ்ரீ ராமலு ஆகியோரின் ஒப்புதல் பெறப்பட்டு நேரடி ஆர்டர் விடுக்கப்பட்டது. 2020 ஏப்ரல் 1 ஆம் தேதி விலை நிர்ணயம் தொடர்பாக ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுமார் 10 சாதனங்கள் கொண்ட பிபிஇ கிட் ஒன்று ரூ.2,117க்கு வாங்க முடிவு செய்யப்பட்டது.
இரண்டாவது ஆர்டர் அதே நிறுவனத்திடம் ஏப்ரல் 10 ஆம் தேதி ஒரு பிபிஇ கிட் ரூ.2,104க்கு விடப்பட்டது. அதன் பிறகு பிக் பார்மாசிட்டிகல்ஸ் நிறுவனத்திடம் ஒரு பிபிஇ கிட் ரூ.2049 வீதம் 1 லட்சம் பிபிஇ கிட்கள் ஆர்டர் கொடுக்கப்பட்டன. அதன்படி மொத்தம் ரூ.62.71 கோடிக்கு பர்சேஸ் ஆர்டர் விடுக்கப்பட்டது.
பிபிஇ கிட்களை எதற்காக சீனாவில் இருந்து கொள்முதல் செய்தனர் என தெரியவில்லை. இதற்கு முன்பு கர்நாடகா மாநில மருத்துவ விநியோக கழகம் ரூ.330 முதல் ரூ.1,444 விலைக்கு கொள்முதல் செய்தனர். உலகளவில் விலை குறைவாக கிடைக்கும்போது, சீனா நிறுவனங்களிடம் கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன.
இதற்காக அந்த நிறுவனங்களிடம் கொட்டேசன் கூட வாங்கவில்லை. இந்த உபகரணங்களை கர்நாடகா கொண்டுவர போக்குவரத்துக்கு மட்டும் ரூ.21.34 கோடி செலவாகியுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ.14 கோடி நஷ்டமாகியுள்ளது. மேலும் ஆர்டர் செய்ததில் 140 பிபிஇ கிட்கள் வரவில்லை. எனவே இதுகுறித்து இன்னும் விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications