3000 ஆபாச வீடியோ.. "பிரஜ்வல் மீது கடும் நடவடிக்கை.." சொல்வது ஜேடிஎஸ் கூட்டணியில் உள்ள பாஜக தலைவர்
பெங்களூர்: கர்நாடகாவில் பாஜக வென்றால் பிரஜ்வல் ரேவண்ணா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக மாநில தலைவர் அசோகா தெரிவித்துள்ளார்.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த சில காலமாகவே பெரும் அரசியல் பரபரப்பு நிலவி வருகிறது. அங்கு ஜேடிஎஸ் மூத்த தலைவர் பிரிஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் அதிர வைத்துள்ளது.

இது அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஜேடிஎஸ் கூட்டணியில் பாஜக இருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் இருந்து பாஜக தன்னை தள்ளியே வைத்து இருக்கிறது.
பிரிஜ்வல் ரேவண்ணா: கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் சார்பில் பிரிஜ்வல் ரேவண்ணா களமிறங்குகிறார். அங்கு தேர்தல் முடிந்துவிட்ட போதிலும் கர்நாடகாவில் மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு மே 7ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த பிரிஜ்வல் விவகாரம் அந்த வாக்குப்பதிவிலும் பெரியளவில் எதிரொலிக்கும் என்றே கூறப்படுகிறது. இது கர்நாடகாவில் பாஜகவுக்குச் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. நிலைமையைச் சமாளிக்க பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்கிடையே லோக்சபா தேர்தலில் ஹாசன் தொகுதியில் போட்டியிடும் ஜேடிஎஸ் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா தேர்தலில் வெற்றி பெற்றாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக பாஜக தலைவர் ஆர்.அசோகா தெரிவித்தார். பிரஜ்வல் ரேவண்ணா இப்போது ஜெர்மனிக்குத் தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர் தப்பித்துச் செல்ல கர்நாடக முதல்வர் சித்தராமையாவே காரணம் என்றும் அவர் சாடினார்..
என்ன சொல்கிறார்: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "எச்.டி. ரேவண்ணா, பிரஜ்வல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் தான் நீண்ட நாட்களாகக் கூறி வருகிறோம். அரசு தான் தாமதமாகச் செயல்பட்டு இருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகள் ஹாசனில் உள்ள பிரஜ்வாலுக்கு சித்தராமையா ஏன் ஆதரவு அளித்தார்" என்று கேள்வி எழுப்பினார்.
கடந்த 2018இல் நடந்த கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பிறகு காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கூட்டணி அமைத்தது. அதேபோல 2019 மக்களவைத் தேர்தலிலும் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தே தேர்தலை எதிர்கொண்டது. ஆனால், அதன் பிறகு கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.. அதன் பின்னரே இந்த லோக்சபா தேர்தலில் பாஜக ஜேடிஎஸ் கூட்டணி அமைத்தது குறிப்பிடத்தக்கது.
பாதிக்காது: ஆர் அசோகா மேலும் கூறுகையில், "எச்டி ரேவண்ணாவின் கைது பாஜகவின் இமேஜை பாதிக்காது.. ஏனெனில் ஜேடிஎஸ் மற்றும் பாஜக தனித்தனி சின்னங்களிலேயே போட்டியிடுகின்றன. கர்நாடக லோக்சபாவில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றால், பிரஜ்வல் ரேவண்ணா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
கைது: பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்திய வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தையுமான எச்.டி.ரேவண்ணாவை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த சிறப்புப் புலனாய்வுக் குழு முன்னாள் பிரதமர் தேவகவுடா வீட்டில் பதுங்கி இருந்த ரேவண்ணாவை நேற்று கைது செய்தனர். பிரஜ்வல் மற்றும் எச்டி ரேவண்ணா இருவர் மீதும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இவை போலியாக மார்ஃப் செய்யப்பட்ட வீடியோக்கள் என்றே ஜேடிஎஸ் தொடர்ந்து கூறி வருகிறது.
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ள நிலையில், பிரஜ்வலை கைது செய்ய இன்டர்போலிடம் இருந்து சிபிஐ ப்ளூ கார்னர் நோட்டீஸை பிறப்பிக்கவும் கோரிக்கை விடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications