"கமிஷன்" கேட்டு ஒப்பந்ததாரருக்கு கொலை மிரட்டல்- ஆந்திரா தப்ப முயன்ற கர்நாடகா பாஜக எம்எல்ஏ கைது!
பெங்களூர்: பெங்களூர் மாநகராட்சி ஒப்பந்ததாரர் செல்வராஜிடம் கமிஷன் தொகை கேட்டு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் கர்நாடகா பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா அதிரடியாக கைது செய்யப்பட்டார். கர்நாடகா போலீசாரிடம் இருந்து தப்பி ஆந்திராவுக்கு ஓட முயன்ற போது கோலாரில் சிக்கினார் பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா. இவர் மீது பெங்களூர் போலீசார் 2 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏ. முனிரத்னா, கடந்த பாஜக ஆட்சியில் அமைச்சராகவும் இருந்தார். 2021-ம் ஆண்டு பெங்களூர் மாநகராட்சியில் குப்பைகள் அள்ளும் ஒப்பந்தம் தொடர்பாக ஒப்பந்ததாரர் செல்வராஜிடம் ரூ20 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளார். அதாவது 30% கமிஷன் கேட்டுப் பெற்றிருக்கிறார். முனிரத்னா.

இந்த விவகாரத்தில் செல்வராஜ்- முனிரத்னா இடையே மோதல் இருந்தது. இதனையடுத்து ஒப்பந்த விவகாரம் தொடர்பான முனிரத்னா பேசிய 7 ஆடியோக்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன.
இதில், ஒப்பந்ததாரர் செல்வராஜிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தது, ஜாதியை சொல்லி இழிவாகப் பேசியது என சர்ச்சையான விவகாரங்கள் இடம் பெற்றிருந்ததால் பிரச்சனை வெடித்தது. இது தொடர்பாக முனிரத்னா மீது காவல் நிலையங்களில் புகார் தரப்பட்டது. ஒக்கலிகா கவுடா ஜாதியையும் இழிவாக பேசியதாகவும் முனிரத்னா மீது மேலும் ஒரு புகார் தரப்பட்டது.
இதனையடுத்து முனிரத்னா மீது வழக்குப் பதிவு செய்த கர்நாடகா போலீசார் அவரை கைது செய்து விசாரிக்க முடிவு செய்தனர். ஆனால் முனிரத்னாவுக்கு போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு ஆந்திராவுக்கு தப்பி ஓட முயன்றார்.
ஆனாலும் விடாத போலீசார், முனிரத்னாவை பின் தொடர்ந்து கோலாரில் மடக்கினர். கோலார் போலீசார் உதவியுடன் முனிரத்னா அதிரடியாக கைது செய்யப்பட்டார். தற்போது அவரிடம் பெங்களூர் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications