கர்நாடகாவில் திடீர் திருப்பம்.. எடியூரப்பா ஆட்சிக்கு ஆபத்தா? ரகசிய ஆலோசனை நடத்திய பாஜக எம்எல்ஏக்கள்
பெங்களூரு: கர்நாடகாவில் திடீர் திருப்பமாக 25 பாஜ எம்எல்ஏக்கள் ரகசிய ஆலோசனை நடத்தி உள்ளார்கள். இந்த சந்திப்பால் எடியூரப்பா ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுமா என்ற பரபரப்பு நிலவுகிறது.
கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்து வந்தது. இந்நிலையில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள் பாஜக ஆட்சியமைக்க உதவும் வகையில் கடந்த ஆண்டு ராஜினாமா செய்தனர்.
இதனால் பெரும்பான்மையை இழந்த குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து எடியூரப்பா தலைமையில் பாஜக அரசு கர்நாடகாவில் பதவி ஏற்றது.

ரகசிய ஆலோசனை
ஆனால் குமாரசாமியின் ஆட்சியில் இருந்ததைப் போலவே இப்போது குழப்பம் உள்ளதாக கூறப்படுகிறது.. அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்காதவர்கள், கட்சி தலைமைக்கு எதிராக அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. கர்நாடகா மாநிலம் பெலகாவியில் உள்ள பாஜ மூத்த எம்எல்ஏ உமேஷ்கத்தி வீட்டில் வடகர்நாடகா பகுதியை சேர்ந்த 25 பாஜ எம்எல்ஏ.க்கள் திடீரென வியாழக்கிழமை இரவு விருந்துடன் ரகசிய ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சந்தித்தது ஏன்? விளக்கம்
இதனிடையே இந்த ஆலோசனை குறித்து பேசிய பாஜக எம்எல்ஏ உமேஷ்கத்தி ‘ கட்சிக்கு விரோதமாக எந்த செயலிலும் நாங்கள் ஈடுபட மாட்டோம். எடியூரப்பாவை நீக்கவோ, ஆட்சி மாற்றம் ஏற்படுத்தவோ நாங்கள் ஒன்று கூடவில்லை. லாக்டவுனால் 2 மாதங்களாக யாரும் சந்திக்காமல் இருந்தோம். இப்போது ஊரடங்கை தளர்த்தியதால் சற்று சந்தித்து பேசினோம் என்றார்.

நடவடிக்கை எடுக்கப்படும்
இதற்கிடையே பாஜக தலைமை கடுமையாக எச்சரித்துள்ளது ‘கட்சிக்கு விரோதமாக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது கட்சி விதிமுறைகள்படி நடவடிக்கை எடுக்கப்படும். தேவையில்லாத குழப்பம் ஏற்படுத்துவது சரியல்ல,' என்று கூறியுள்ளது. திடீரென பாஜக எம்எல்ஏக்கள் நடத்திய ரகசிய ஆலோசனையால் கர்நாடகாவில் பரபரப்பு நிலவுகிறது.

பசனகவுடா பாட்டீல் பேச்சு
பாஜக எம்எல்ஏ உமேஷ்கத்தி நடத்திய ரகசிய ஆலோசனையில் பங்கேற்ற எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் யத்னால் கூறுகையில், ‘‘சொந்த கட்சி எம்எல்ஏ.க்கள் சந்தித்து பேச யாருடைய அனுமதியும் கேட்க வேண்டிய அவசியமில்லை என்றார். எங்களை பொறுத்தவரை எடியூரப்பா மாநில முதல்வர் மட்டும் தான். கட்சி தலைவர் கிடையாது. எங்களுக்கு தலைவர் என்றால் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் தான். தேவைப்பட்டால் நாங்கள் முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, குமாரசாமி ஆகியோரை சந்தித்து பேசுவோம் என்றார். இவரது பேச்சால் பாஜக தலைமை கடும் கோபத்தில் உள்ளது.












Click it and Unblock the Notifications