7 முறை.. டிராபிக் விதிமீறலில் ஈடுபட்ட சித்தராமையா கார்! தள்ளுபடியில் அபராதம் செலுத்திய சிஎம் ஆபீஸ்
பெங்களூர்: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் கார் மீது போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 7 வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்நிலையில் இதற்கான அபராத தொகை தற்போது செலுத்தப்பட்டிருக்கிறது.
சித்தராமையாவுக்கு அலுவல் பணிக்காக டொயோட்டா ஃபார்ச்சூனர் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த கார் தொடர்ந்து விதி மீறல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறது. நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பு, கண்காணிப்பு கேமராக்கள் முதலமைச்சரின் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் பல விதிமீறல்களைப் பதிவு செய்துள்ளன என போக்குவரத்து போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

6 முறை சீட் பெல்ட் அணியாதது, மற்றும் ஒரு முறை அதிவேகமாக பயணித்தது என விதி மீறல்கள் காரணமாக மொத்தம் 7 வழக்குகள் முதலமைச்சரின் கார் மீது பதியப்பட்டது. இவை அனைத்தும் கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்தவை. சீட் பெல்ட் விதிமீறல்களில் முதலமைச்சர் சித்தராமையா பயணிக்கும்போதுதான் அவை நிகழ்ந்ததாகத் தெரிகிறது. ஆகஸ்ட் மாதத்தில் பதிவு செய்யப்பட்டதே சமீபத்திய விதிமீறலாகும்.
ஏழு போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்கள் தற்போது செலுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து அபராதங்களில் 50% தள்ளுபடி சலுகையைப் பயன்படுத்தி, அவரது அலுவலகம் ரூ. 2,500 செலுத்தி இந்த வழக்குகளை முடித்துள்ளது. அதேபோல கர்நாடக பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திராவின் கார் சம்பந்தப்பட்ட 10 போக்குவரத்து விதிமீறல்களுக்கும் அபராதம் செலுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது வழக்கமான விஷயம்தான். ஆனால் முதலமைச்சரின் வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்படுவதும், அதற்கான தொகை கட்டப்பட்டதும்தான் தற்போது கவனம் பெற்றிருக்கிறது.
சமீபத்தில் கர்நாடக மாநில அரசு, போக்குவரத்து விதிமீறல் காரணமாக விதிக்கப்பட்ட அபராத தொகைக்கு 50 சதவீத தள்ளுபடியை அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் முதலமைச்சர் காருக்கு விதிக்கப்பட்ட அனைத்து அபராதங்களும் செலுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதாவது மொத்த அபராத தொகை ரூ.5,000. இதில் 50% தள்ளுபடி போக ரூ.2,500 செலுத்தப்பட்டிருக்கிறது. இந்த தள்ளுபடி முதல்வரின் காருக்கு மட்டுமல்ல, கர்நாடகா முழுவதும் நிலுவையில் உள்ள அனைத்து போக்குவரத்து விதிமீறல்களுக்கும் இந்த தள்ளுபடி திட்டம் பொருந்தும்.
விஜயேந்திராவின் கார் சம்பந்தப்பட்ட விதிமீறல்களில் சீட் பெல்ட் அணியாதது, அதிவேகம், சிக்னல் ஜம்ப் ஆகியவை அடங்கும். கடந்த 2020 முதல் நிலுவையில் இருந்த ரூ. 3,250 அபராதத்தை அவரது அலுவலகம் தற்போது செலுத்தியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சலுகைத் திட்டம் ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 12 வரை அமலில் இருக்கும் என்று காவல்துறை கூறியுள்ளது. 2019 மற்றும் 2025 க்கு இடையில் பெங்களூரில் சுமார் 3 கோடி போக்குவரத்து அபராதங்கள் விதிக்கப்பட்டு அவை கட்டப்படாமல் நிலுவையில் உள்ளன. இதன் மொத்த அபராதத் தொகை சுமார் ரூ. 1,000 கோடி ஆகும். சனிக்கிழமை நிலவரப்படி, 16,21,721 வழக்குகள் தீர்க்கப்பட்டு, மொத்தம் ரூ. 45,52,750 வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications