பாஜக ஆட்சியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 36 பேர் பலி.. விசாரிக்கத்தான் குன்ஹா கமிஷன்: டிகே சிவகுமார்
பெங்களூர்: கர்நாடகாவில் முந்தைய பாஜக ஆட்சியில் கொரோனா காலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 36 பேர் பலியாகினர்; அது தொடர்பாக விசாரணை நடத்தவே நீதிபதி குன்ஹா கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது என கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் முந்தைய பாஜக ஆட்சியில் ஒப்பந்த பணிகளுக்கு 40% லஞ்சம் பெற்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஒபப்ந்ததாரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அமைச்சராக இருந்த ஈஸ்வரப்பா பதவியும் பறிபோனது. கர்நாடகா சட்டசபை தேர்தலின் போது 40% கமிஷன் முக்கிய இடம்பெற்றது.

இதனையடுத்து தற்போதைய கர்நாடகா காங்கிரஸ் அரசு, முந்தைய பாஜக ஆட்சிக் காலத்தின் 40% கமிஷன் லஞ்சம் பெற்றது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைத்தது. அதனைத் தொடர்ந்து முந்தைய பாஜக ஆட்சியில் கொரோனா கால ஊழல் முறைகேடுகள் குறித்து விசாரிக்க நீதிபதி குன்ஹா கமிஷன் ஒன்றையும் அமைத்துள்ளது.
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தவர் நீதிபதி குன்ஹா. இந்த வழக்கில் பெங்களுரில் 4 ஆண்டுகாலம் சசிகலா சிறை தண்டனை அனுபவித்தார்.
தற்போது ஓய்வுபெற்றுவிட்ட நிலையில் நீதிபதி குன்ஹா தலைமையில் கொரோனா கால ஊழல்களை விசாரிக்க கர்நாடகா காங்கிரஸ் அரசு கமிஷன் அமைத்துள்ளது பாஜக தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இது தொடர்பாக கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் கூறுகையில், முந்தைய பாஜக ஆட்சியில் கொரோனா காலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 36 பேர் பலியானார்கள். ஆனால் அப்போதைய அரசாங்கம் வெறும் 3 பேர் மட்டுமே பலியானதாக சொன்னது. இது குறித்து விசாரிக்க வேண்டாமா? அதற்காகவே நீதிபதி குன்ஹா கமிஷன் அமைத்துள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications