காங்கிரஸ், ஜேடிஎஸ்ஸில் இருந்து ஓட்டம்.. கூட்டணியை கவிழ்த்து பாஜகவில் அமைச்சரானவர்களுக்கு செம அடி!
பெங்களூர்: கர்நாடகாவில் நடந்த காங்கிரஸ்-ஜேடிஎஸ் ஆட்சியை கவிழ்த்துவிட்டு பாஜகவில் இணைந்து அமைச்சர்களாக வலம் வந்த பலரும் இந்த தேர்தலில் கடும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
கர்நாடகாவில் கடந்த 2018 ல் நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் பாஜக 104 இடங்களில், காங்கிரஸ் 80 இடங்களிலும், ஜனதாதளம் கட்சி 37 இடங்களிலும் வென்றது. இதையடுத்து காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. முதல்வராக குமாரசாமி செயல்பட்டார்.

இந்த ஆட்சி ஓராண்டு மட்டுமே நீடித்தது. காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளின் எம்எல்ஏக்கள் 17 பேர் பாஜகவுக்கு தாவினர். இதனால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. மேலும் பாஜக ஆட்சி அமைந்தது. இதையடுத்து கட்சி மாறியவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்களில் பெரும்பாலானவர்கள் அந்தந்த தொகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு, பலரும் அமைச்சர்களாகினர்.
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவி அமைச்சர் பதவியை அனுபவித்து வரும் சுதாகர் சிக்கபள்ளாப்பூர் தொகுதியிலும், எம்டிபி நாகராஜ் பெங்களூர் புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை தொகுதியிலும், எஸ்டி சோமசேகர் மல்லேஸ்வரம் தொகுதியிலும் பின்தங்கி உள்ளனர். மாறாக காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவி அமைச்சரான முனிரத்னா பெங்களூர் ராஜராஜேஸ்வரி தொகுதியில் முன்னிலையில் உள்ளார். கேஆர் புரம் தொகுதியில் அமைச்சர் பைரதி பசவராஜ் முன்னிலையில் உள்ளார்.
மேலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்து சர்ச்சையில் சிக்கி அமைச்சர் பதவியை இழந்த ரமேஷ் ஜார்கிகோளி பெலகாவி மாவட்டம் கோகாக் தொகுதியில் பின்தங்கி உள்ளார். அதேவேளையில் ஜேடிஎஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவி அமைச்சரான நாராயணகவுடா மண்டியா மாவட்டம் கேஆர்பேட்டை தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். மாறாக ஜேடிஎஸ்சில் இருந்து பாஜக சென்று அமைச்சரான கோபாலய்யா முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
******












Click it and Unblock the Notifications