பெங்களூர்: இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் ஜான்சன் மர்ம மரணம்! 4-வது மாடியில் இருந்து விழுந்தது எப்படி?
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜான்சன் 4-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான்சன் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்து உயிரிழந்தாரா? என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடகா மாநிலம் ஹாசன் அரிசிகெரே பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் ஜூட் ஜான்சன் (வயது 52). பெங்களூர் கொத்தனூர் கனகஶ்ரீ லே அவுட் எஸ்எல்வி பாரடைஸ் அடுக்கு மாடி குடியிருப்பில் ஜான்சன் வசித்து வந்தார்.

இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியில் 1996-ம் ஆண்டு இடம் பெற்றிருந்தார் ஜான்சன். 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார் ஜான்சன். மொத்தம் 39 முதல் நிலை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று 125 விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர்.
இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை முற்பகலில் ஜான்சன் தமது அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடினார் ஜான்சன். மருத்துவமனைக்கு ஜான்சன் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துவிட்டார்.
இது தொடர்பாக பெங்களூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 4-வது மாடியின் பால்கனியில் இருந்து ஜான்சன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். 4-வது மாடியில் இருந்து தவறிதான் கீழே விழுந்து ஜான்சன் உயிரிழந்தாரா? அல்லது தற்கொலை செய்வதற்காக 4-வது மாடியில் இருந்து அவர் கீழே குதித்தாரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜான்சன் மரணத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா, இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், கும்ப்ளே, கவுதம் காம்பீர் உள்ளிட்டோர் அதிர்ச்சியும் ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications