3 மணி நேரம்! 26 கிமீ! 28 தொகுதிகள்! அசராமல் பேரணி நடத்திய பிரதமர்! காங்கிரஸுக்கு "கை" கொடுத்த மக்கள்
பெங்களூர்: கர்நாடகாவில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்பது குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பிரதமர் நரேந்திர மோடி பேரணி நடத்திய பெங்களூர் பிராந்தியத்தில் காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளில் வெல்லும். ஆனால் பாஜக வெறும் 10 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா கருத்து கணிப்புகள் கூறுகின்றன.
அதிலும் பெங்களூர் பிராந்தியத்தில் கடந்த முறை பாஜக 11 இடங்களில் வென்ற நிலையில் தற்போது 1 சீட்டு குறைந்து 10 இடங்களில் மட்டுமே வெல்லும் வாய்ப்பு இருப்பதாக இந்த கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நிறைவடைந்தது. இந்த தேர்தலில் 65 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இது 5 மணி நிலவரப்படி கருத்துக் கணிப்பாகும். துல்லியமான வாக்கு சதவீதம் இனிதான் தெரியவரும். 224 சட்டசபைத் தொகுதிகளை கொண்ட கர்நாடகா சட்டசபையின் பதவிக்காலம் மே 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில்தான் இன்றைய தினம் தேர்தல் நடந்தது.
வரும் 13 தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 113 தொகுதிகளை எந்த கட்சி வெல்கிறதோ அந்த கட்சியே ஆட்சி அமைக்க உரிமை கோரும். இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது. ஆட்சியை யார் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை சில ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி பெரும்பாலான முடிவுகள் தொங்கு சட்டசபை ஏற்படும் என்கின்றன. சில கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் கட்சி தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்கின்றன. தொங்கு சட்டசபை ஏற்பட்டாலும் காங்கிரஸ் அந்த மேஜிக் நம்பரை நெருங்கும் அளவுக்கான இடங்களை பெறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

எனவே இப்படி பெரும்பான்மைக்கு 10 அல்லது 15 இடங்கள் அல்லது அதற்கும் குறைவான இடங்கள் வேண்டுமென்றால் காங்கிரஸ் சற்றும் தயங்காமல் கூட்டணி ஆட்சிக்கு குமாரசாமியை அழைக்கும், அவர் முதல்வராவார். இப்படிதான் கடந்த முறை நடந்தது. இந்த நிலையில் பெங்களூர் பிராந்தியத்தில் மொத்தம் 28 தொகுதிகள் உள்ளன.
இந்தத் தொகுதிகளில் 17 தொகுதிகளில் காங்கிரஸ் வெல்லும் என இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா கணித்துள்ளது. மீதமுள்ள 11 இடங்களில் பாஜக 10 இடங்களில் வெல்லும் என்றும் ஒரு இடத்தில் மற்ற கட்சிகள் வெல்லும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த முறை இந்த பெங்களூர் பிராந்தியத்தில் பாஜக 11 இடங்களை பெற்றது. ஆனால் இந்த முறை 1 சீட்டு குறைந்து 10 இடங்களில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
இத்தனைக்கும் இந்த பெங்களூர் பிராந்தியத்தில்தான் பிரதமர் நரேந்திர மோடி பேரணி நடத்தினார். கடந்த வாரம் 26 கிலோமீட்டருக்கு 3 மணி நேரம் திறந்த பிரச்சார வாகனத்தில் பேரணியாக பிரதமர் சென்றார். அவர் சென்ற இடங்களில் மலர் தூவி அவரை பாஜகவினர் வரவேற்று உற்சாகப்படுத்தினர். சுமார் 3 நாட்கள் இந்த பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது கூட பாஜக நிர்வாகியின் செல்போன் பிரச்சார வாகனத்தில் விழுந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. விசாரணையில் ஆரவாரம் செய்த போது கையில் இருந்த போன் தவறி விழுந்ததாக அந்த பாஜக நிர்வாகி விளக்கம் அளித்திருந்தார்.

சாலையின் இரு புறங்களிலும் மோடி, மோடி என கோஷங்கள் எழுந்தன. வடமாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்தாலும் கடந்த 2018 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் கையே ஓங்கி இருந்தது. இதற்கு காரணம் கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வென்று முதல்வராக சித்தராமையா இருந்தார். அவர் மீது எந்த ஒரு ஊழல் புகாரும் இல்லாமல் இருந்தது. எனவே இந்த முறை ஹிஜாப், இந்தி திணிப்பு உள்ளிட்ட விவகாரங்களால் பாஜகவுக்கு தோல்வி ஏற்படக் கூடாது என்பதற்காக பிரதமர் மோடி புதிய உத்தியை கையில் எடுத்தார்.
ஆயினும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுவதை பார்த்தால் பெங்களூர் தொகுதியில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தும் கடந்த முறையை விட இந்த முறை ஒரு சீட்டு குறைய வாய்ப்பிருப்பதாகவும் இது பாஜகவுக்கு சற்று பின்னடைவுதான் என்றும் கருதப்படுகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 16 இடங்களிலும் பாஜக 12 இடங்களிலும் வென்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications