3 முறை தவறி.. 4வது தடவை கச்சிதமாக கதையை முடித்த அமித் ஷா.. சிங்கிளாக போராடிய டி.கே சிவக்குமார்!
குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மஜத அரசு கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்து உள்ளது.
Recommended Video
பெங்களூர்: குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மஜத அரசு கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்து உள்ளது. ஆட்சிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியை தழுவி உள்ளது.
கர்நாடக சட்டசபையின் பலம் 225. இங்கு பெரும்பான்மை பெற 113 எம்எல்ஏக்கள் தேவை. இந்த நிலையில் நடந்த வருடம் 116 எம்எல்ஏக்கள் பலத்துடன் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் இணைத்து ஆட்சியை பிடித்தது.
அப்போதே ஆட்சி 5 மாதம்தான் நீடிக்கும் என்று பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா குறிப்பிட்டு இருந்தார். ஆனால் ஆட்சியை கவிழ விடாமல் காங்கிரஸ் மூத்த உறுப்பினர் டிகே சிவக்குமார் இறுக்கமாக பிடித்துக் கொண்டு இருந்தார்.
கவிழ்ந்தது குமாரசாமி அரசு ...அப்பாவும் மகனும் ராசியில்லா ராஜாக்கள்
என்ன முயற்சி
கர்நாடகாவில் ஆட்சி அமைக்க முடியவில்லை என்றாலும் கூட, அங்கு தனிப்பெரும் கட்சி பாஜகதான். பாஜகவிற்கு தனியாக 105 எம்எல்ஏக்கள் பலம் இருந்தது. இதனால் எப்படியாவது காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சியை கவிழ்க்கலாம் என்று பாஜக பல மாதங்களாக திட்டமிட்டது.
கொண்டு வந்தது
இதற்காக பாஜக கொண்டு வந்த திட்டம்தான் ஆப்ரேஷன் லோட்டஸ். அமித் ஷா அதிரடியாக களமிறங்கி காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள ஆட்சியை எப்படி எல்லாம் கவிழ்க்கலாம் என்று திட்டமிட்டார். காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணியில் இருந்து எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து, ஆட்சியை கவிழ்ப்பதே ஆபரேஷன் லோட்டஸ்.
மூன்று முறை தோல்வி
இதையடுத்து மூன்று முறை ஆபரேஷன் லோட்டஸ் கொண்டு வந்து, ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சி செய்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் அமித் ஷாவின் முயற்சி இதில் தோல்வி அடைந்தது. முக்கியமாக ஆபரேஷன் லோட்டஸ் 3.0ல் ஆட்சி கவிழும் நிலைக்கு சென்று, அதன்பின் ஆட்சியை கவிழ்க்க முடியாமல் பாஜக தோல்வி அடைந்தது.
யார் காத்தது
அமித் ஷா ஆபரேஷன் லோட்டஸ் பிளானை களமிறங்கும் போதெல்லாம் அதை சரியாக தடுத்து வந்தவர் காங்கிரஸ் மூத்த உறுப்பினர் டிகே சிவக்குமார்தான். அவர்தான் அமித் ஷாவின் மூவ்களை சரியாக கணித்து, அவருக்கு முன்பாக செயல்பட்டு ஆட்சியை காப்பாற்றி வந்தார். ஆனால் இந்த் முறையை அவர் அமித் ஷாவின் திட்டங்களுக்கு முன் தோல்வி அடைந்துவிட்டார்.
16 பேர்
10 எம்எல்ஏக்கள் மேல் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணியில் இருந்து விலகினால்தான் பாஜகவின் ஆப்ரேஷன் லோட்டஸ் வெற்றிபெறும் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் சரியாக 16 பேர் மொத்தமாக காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணியில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் அனுப்பினார்கள்.
அடுத்து என்ன
அதோடு இல்லாமல் டிகே சிவக்குமாரின் அதே ரிசார்ட் ஸ்டைல் அரசியலை கையில் எடுத்து, அதேபோல் 16 எம்எல்ஏக்களையும் அதிரடியாக மும்பையில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைத்தார். இவர்களை சந்தித்து சமாதானம் செய்ய டி கே சிவக்குமார் எவ்வளவு முயன்றும் எந்த செயலும் பயன் அளிக்கவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பை இவர் தள்ளிப்போட முயன்றதும் தோல்வி அடைந்தது. இவர் தனி ஆளாக போராடியது எல்லாம் தற்போது வீணாகி உள்ளது.
வெற்றி
சரியாக 11 மாதங்கள் கழித்து ஆபரேஷன் லோட்டஸ் 4.0 வெற்றிபெற்று உள்ளது. டி கே சிவக்குமாரின் அனைத்து முயற்சிகளையும் தவிடு பொடியாக்கி பாஜக, கர்நாடக அரசை வெற்றிகரமாக கவிழ்த்து இருக்கிறது.. இனி கர்நாடக அரசியலில் என்ன நடக்கும்.. அடுத்த என்ன மாற்றங்கள் நிகழும்.. டி.கே சிவக்குமாரின் அடுத்த மூவ் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்!