முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்த அமைச்சருக்கான சலுகைகள்- நிராகரித்தார் எடியூரப்பா
பெங்களூரு: கர்நாடகா முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தாலும் தாம் பதவியில் இருக்கும் வரையில் அமைச்சருக்கான சலுகைகள் அவருக்கு வழங்கப்படும் என முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்திருந்தார். ஆனால் இதனை முன்னாள் முதல்வர் எடியூரப்பா நிராகரித்துள்ளார்.
கர்நாடகா முதல்வராக இருந்த எடியூரப்பா கடந்த மாதம் ஜூலை 27-ந் தேதி பதவியை கண்ணீர் மல்க ராஜினாமா செய்தார். எடியூரப்பாவின் வயது மூப்பு மற்ரும் மீதான அதிருப்தியையும் சுட்டிக்காட்டி அவரது பதவி விலக சொன்னது பாஜக மேலிடம்.

ஆனால் எடியூரப்பா சார்ந்த லிங்காயத் சமூகத்தினர் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். காங்கிரஸ் கட்சியின் 2 லிங்காயத் சமூக எம்.எல்.ஏக்களும் கூட எடியூரப்பா பதவி விலக எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படியான நீண்ட போராட்டங்களுக்குப் பின்னர் எடியூரப்பா ஒருவழியாக பதவி விலகினார்.
இதைத் தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் எஸ்.ஆர். பொம்மையின் மகன் பசவராஜ் பொம்மை கர்நாடகா முதல்வராக பதவியேற்றார். எடியூரப்பாவுக்கு மிகவும் நெருக்கமானவர் பசவராஜ். தற்போது முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சரவையும் பதவியேற்றுள்ளது.
இதனிடையே முதல்வர் பதவியில் இல்லாததால் எம்.எல்.ஏ.வாகவே மட்டுமே இருக்கிறார் எடியூரப்பா. இதனால் அவர் வசித்து வரும் காவிரி பங்களாவை காலி செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. அதே பங்களாவில் எடியூரப்பா தங்கும் வகையில் அவருக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்படும் என்றார் முதல்வர் பசவராஜ் பொம்மை. அதாவது தாம் முதல்வராக பதவியில் இருக்கும் வரை எடியூரப்பாவுக்கு அமைச்சர்களுக்கான அனைத்து சலுகைகளும் கிடைக்கும் என அறிவித்திருந்தார் பசவராஜ்.
அமைச்சர்களுக்கான வாகனம், ஓட்டுநர், பங்களா ஆகியவை எடியூரப்பாவுக்கும் கிடைக்கும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார் பசவராஜ். வேறு சில மாநிலங்களில் இத்தகைய நடைமுறைகள் இருந்திருக்கின்றன. கர்நாடகாவில் இதுதான் முதல் முறை. ஆனால் தற்போது தமக்கு அமைச்சருக்கான எந்த சலுகையும் வேண்டாம்; இது குறித்து கர்நாடகா அரசு வெளியிட்ட உத்தரவை திரும்பப் பெறுங்கள் என கடிதம் அனுப்பியுள்ளார் எடியூரப்பா.












Click it and Unblock the Notifications