ஓசூருக்கு போட்டியாக பெங்களூரில் புதிய விமான நிலையம்.. 3 இடங்களை மத்திய அரசுக்கு அனுப்பிய கர்நாடகா
பெங்களூர்: தமிழகத்தின் ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கு போட்டியாக கர்நாடகா அரசு சார்பில் பெங்களூரில் 2 வது புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய விமான ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக - கர்நாடகா எல்லையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் உள்ளது. இங்கு தற்போது பல்வேறு தொழிற்சாலைகள் வருகின்றன. பெங்களூரில் நிலவும் இடநெருக்கடி காரணமாக பல நிறுவனங்கள் அருகே உள்ள ஓசூரை தேர்வு செய்கின்றன. இதனால் ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதுதொடர்பாக அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் தமிழக சட்டசபையில் 110வது விதியின் கீழ் அறிவித்தார். இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இப்படியான சூழலில் தான் ஓசூர் விமான நிலையத்துக்கு போட்டியாக பெங்களூரில் 2வது விமான நிலையம் அமைக்க கர்நாடகா அரசு முடிவு செய்தது.
பெங்களூர் தேவனஹள்ளியில் தற்போது கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தை தொடர்ந்து புதிதாக இன்னொரு விமான நிலையத்துக்கு கர்நாடகா அரசு முடிவு செய்து அதற்கான பணியை தொடங்கி உள்ளது. இடங்கள் தேர்வு செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வந்தது. தற்போது மொத்தம் 3 இடங்கள் புதிய விமான நிலையத்துக்காக கர்நாடகா அரசு தேர்வு செய்துள்ளது.
அதன்படி கனகபுரா ரோட்டில் 4,800 ஏக்கர் மற்றும் 5,000 ஏக்கரில் 2 இடங்களும், நெலமங்களா அருகே குனிகல் ரோட்டில் 5,200 ஏக்கர் என மொத்தம் 3 இடங்களில் விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை கர்நாடகா அரசு தேர்வு செய்துள்ளது. இதில் கனகபுரா ரோட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள 2 இடங்களும் தெற்கு பெங்களூர் பகுதியில் வரும். இன்னும் சொல்லப்போனாதல் தற்போதைய கெம்பேகவுடா சர்வதே விமான நிலையத்தின் எதிர்திசையில் இந்த இடங்கள் வருகிறது. இன்னொரு இடம் என்பது ராமநகர் மாவட்டத்தில் வரும்.
இந்த 3 இடங்கள் குறித்த விபரங்களை நேற்றைய தினம் கர்நாடகா அரசு மத்திய விமான துறைக்கு அனுப்பி வைத்துள்ளது. இதில் ஒரு இடத்தில் புதிதாக விமான நிலையம் அமைக்க ஒப்புதல் தர வேண்டும். இந்த ஒப்புதல் கிடைக்கும்பட்சத்தில் 4,200 ஏக்கர் நிலம் என்பது ஒதுக்கீடு செய்யப்படும் என்று கர்நாடகா அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு விமான நிலையம் அமைக்க வேண்டும் என்றால் அந்த மாநில அரசு முதலில் இடத்தை தேர்வு செய்து மத்திய விமானதுறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அதன்பிறகு அந்த இடங்களை மத்திய விமான ஆணைய அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்வார்கள். விமான ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டு விமான நிலையம் அமைக்க ஏற்ற சூழல் இருப்பின் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கும். அந்த வகையில் தற்போது கர்நாடகா அரசு விமான நிலையம் அமைப்பதற்கான 3 இடங்களை தேர்வு செய்து மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications