லவ் ஜிகாத்.. மதமாற்றத்திற்கு காதலை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை- யோகி மாதிரியே பேசும் எடியூரப்பா
பெங்களூர்: லவ் ஜிகாத் என்ற பெயரில் காதல் திருமணங்கள் மூலம் நடைபெறும் மத மாற்றங்களை தடுப்பதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இதே போன்ற ஒரு கருத்து தெரிவித்திருந்த நிலையில், பாஜக கட்சியைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மங்களூரில் இன்று நடைபெற்ற பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று பேசினார் எடியூரப்பா. அப்போது அவர் கூறியதாவது: லவ் ஜிகாத் நடவடிக்கைகளுக்கு எதிராக கர்நாடக அரசு கடும் நடவடிக்கைகள் எடுக்கும். காதல் என்ற பெயரில் இளம்பெண்கள் மயக்கப்பட்டு, பணத்தாசை காட்டியும் திருமண ஆசை காட்டியும் மதமாற்றம் செய்யப்படுகிறார்கள். இதை மிகவும் தீவிரமாக பரிசீலித்து வருகிறோம். ஆய்வுகளுக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை நேற்று பேசுகையில், மதரீதியாக, திருமணம் என்ற பெயரில் மதமாற்றத்தில் ஈடுபடுவதற்கு எதிராக சட்டம் கொண்டு வருவதற்கு கர்நாடக அரசு யோசித்து வருவதாக தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் திருமணத்தின் பெயரால் மத மாற்றம் நிகழ்ந்தால் அது செல்லத்தக்கது கிடையாது என்று தெரிவித்திருந்தது.
அதேநேரம் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் லவ் ஜிகாத்தை மறுத்திருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி நாடாளுமன்றத்தில், இதுபற்றி தெரிவிக்கையில், லவ் ஜிஹாத் என்ற சொல் தற்போதைய சட்டங்களில் வரையறுக்கப் படவில்லை என்றும், அது தொடர்பான வழக்கை எந்த மத்திய புலனாய்வு நிறுவனமும் பதிவு செய்யவில்லை என்றும், தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications